சல்லடை போட்டு தேடியும் பைசா கிடைக்கலை.. காசா கிராண்ட் யாருன்னு தெரியாது.. அடித்து சொன்ன எ.வ. வேலு
சென்னை: தனது பணிகளை முடக்குவதற்காகவே மத்திய அரசு வருமான வரித்துறையை ஏவி விட்டிருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். ஐடி ரெய்டு நடைபெறும் காசாகிராண்ட் நிறுவனம் யாருடையது என்றே தெரியாது என்றும் கோவை செல்லும் போது அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஹோட்டலில் தங்குவேன் என்றும் எ.வ. வேலு கூறியுள்ளார்.
அமைச்சர் எ.வ. வேலு: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு சொந்தமாக பல்வேறு மருத்துவக் கல்லூரிகளும், நிறுவனங்களும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்களை மிகப்பெரிய வளாகத்தில் நடத்தி வருகிறார்,

ஐடி ரெய்டு: எ.வ வேலுவிற்கு சொந்தமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு அண்மையில் புகார்கள் சென்றன. இதன்பேரில், கடந்த 2ஆம் தேதி முதல் எ.வ. வேலுவுக்கு சொந்தமான கல்லூரிகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
உறவினர்கள் வீடுகளில் ரெய்டு: அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுவரை ரூ.18 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 நாட்கள் ரெய்டு: அதேபோல் காசா கிராண்ட் நிறுவனம், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். காசா கிராண்ட் நிறுவனம் ரூ.700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எ.வ. வேலு பேட்டி: வருமான வரித்துறை சோதனை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, இது போன்ற சோதனைகளுக்கு எல்லாம் நானோ, எனது தலைவரோ, திமுக தொண்டர்களோ அஞ்சப்போவதில்லை என்று கூறினார். ஒரு பைசா கூட என்னிடமிருந்து வருமான வரித்துறை எடுத்து செல்லவில்லை என்றும் தெரிவித்தார். இதன் மூலம் தேர்தலில் எங்களின் பணிகளை முடக்கி விட முடியாது என்று கூறிய எ.வ. வேலு, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
யாருன்னே தெரியாது: நான் தங்கும் விடுதியிலும் வந்து சல்லடை என்பார்களே அதேபோல சல்லடை போட்டு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். எனது மனைவி, பிள்ளைகள் எல்லாம் மன உளைச்சலில் தள்ளும் அளவுக்கு ஐடி அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். காசா கிராண்ட் நிறுவனத்திலும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெறுவதாக சொல்கிறார்கள். அவர்கள் யாரென்றே தெரியாது என்றும் எ.வ. வேலு கூறினார். கோவை செல்லும் போது அரசு விடுதியில் இடமில்லை என்றால் அப்பாசாமி ஹோட்டலில் தங்குவேன் என்றும் எ.வ. வேலு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications