லேகியத்தில் வந்து நிற்கும் சண்டை! பாஜகவை இறங்கி அடிக்கும் அதிமுக! அரசியல் அட்டென்ஷன்!
சென்னை: பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டாலும் அக்கட்சி குறித்தோ, அக்கட்சியின் தலைவர்கள் குறித்தோ வாயே திறக்காமல் மவுனம் சாதித்து வந்த அதிமுக இப்போது திடீரென இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அண்ணாமலையை லேகியம் விற்பவரோடு ஒப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று கிண்டல் அடித்துள்ளார். கவுன்சிலராக கூட ஜெயிக்காத அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் கிடையாது எனவும் அனல் கக்கினார் ஆர்.பி. உதயகுமார். இது வரை அதிமுக -பாஜக இடையே நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த பகை, சில நாட்களாக கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. பாஜக மீதான அதிமுகவின் இந்த திடீர் பாய்ச்சல் பின்னணியில் ஒரு காரணம் கூறப்படுகிறது.

வயதான காலத்தில் செவனேன்னு வீட்டில் இருந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பக்கம் அழைத்துச் சென்று அரசியல் அட்டென்ஷன் பெற்றார் அண்ணாமலை. அது ஒரு நாள் அட்டென்ஷன் என்றாலும், அதிமுக தலைமைக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை நிகழ்வாகவே கருதப்படுகிறது. இன்று முன்னாள், நாளை இந்நாளாக கூட இருக்கலாம் என்பது தான் அந்த நிகழ்வில் ஒளிந்துள்ள சூட்சுமம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் இனியும் மவுனம் சாதித்தால் வேலைக்கு ஆகாது என பாஜகவையும், குறிப்பாக அண்ணாமலையையும் இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளது அதிமுக.
பாஜகவும் லேகியம் விவகாரத்தை லேசில் விடுவதாக இல்லை. அண்ணாமலை மீதான ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சுடச்சுடப் பதிலடி கொடுத்துள்ளார். ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை அண்ணாமலை விற்கிறார் என அதிமுகவுக்கு கே.பி.ராமலிங்கம் பதில் கொடுத்துள்ளார். பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியை சிறுபான்மை சமுதாய மக்கள் நம்பக்கூடாது எனவும் திமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், அந்தக் குற்றச்சாட்டையும் பொய் என நிரூபிப்பதற்காக பாஜக மீது பாயத் தொடங்கியுள்ளது அதிமுக.
இப்போது தான் ஆரம்பம் இனி வரும் நாட்களில் அதிமுக -பாஜக இடையேயான வார்த்தை யுத்தம் இன்னும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஒன்றுக்கு ஒன்றாக கண்ணுக்கு கண்ணாக என இருந்த இரண்டு கட்சிகளும் இப்போது குடுமி பிடி சண்டை போடத் தொடங்கியுள்ளது. பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி மோதுவதை சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய மூவர் தரப்பு ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால், பிரதமர் மோடி குறித்து எடப்பாடி பழனிசாமியோ அல்லது அதிமுக முன்னாள் அமைச்சர்களோ இது நாள் வரை ஒரு வார்த்தை விமர்சித்தது கிடையாது. அண்ணாமலையையும், தமிழக பாஜக நிர்வாகிகளையும் தான் அதிமுக வெளுத்து வாங்குகிறது.












Click it and Unblock the Notifications