வடக்கில் மோடி அலை இருக்கலாம்.. ஆனால் தெற்கில் யார் கொடி பறக்குது பாருங்க.. பரபர சர்வே!
சென்னை: ராகுல் காந்தி பிரதமராவதே தங்களுக்கு விருப்பம் என்று தென்
மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரள மக்கள் விரும்புகின்றனர் என்பது ஒரு சர்வே முடிவில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்தியாவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே போட்டி அதிகம். அகஸ்தா வெஸ்ட்லாண்ட் ஊழல் குறித்து பாஜக கூறுவதும் ரஃபேல் விமான கொள்முதல் முறைகேடு குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சாதகமாக்கிக் கொள்ள
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் போராடி வருகின்றன. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் மக்கள் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது.
இந்தியா டுடே சர்வே
இந்நிலையில் பிரதமராக மோடியே மீண்டும் வர விருப்பமா, இல்லை ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என ஆசையா என்பது குறித்து தென் மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளத்தில் இந்தியா டுடே சார்பில் சர்வே நடத்தப்பட்டது.
மோடியை தவிர்க்க
கேரளத்தில் அடுத்த பிரதமர் யாரென்ற கேள்விக்கு 38 சதவீதம் பேர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேர்வு செய்துள்ளனர். அதேபோல் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என 31 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இவற்றில் ராகுலுக்கே அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. மோடியை தவிர்க்க காரணங்களாக கூறப்படுவது சபரிமலை விவகாரம்தான்.
தமிழக அரசியல்
அதுபோல் தமிழகத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என 36 சதவீதம் பேரும் மோடி பிரதமராக வேண்டும் என 29 சதவீதம் பே்ரும் விரும்புகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை கூட்டணி என்பது முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி கூட கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது என்று அரசியல் நோக்காளர்கள் கூறுகின்றனர்.