இந்தியாவை உருவாக்கியது ரிஷிகளும் முனிவர்களும் தான்.. அரசியலமைப்பில் சனாதனம் உள்ளது - ஆளுநர் ரவி
சென்னை: சனாதன தர்மத்தின் வழியாக ரிஷிகள், முனிவர்களால் உருவான நாடு இந்தியா என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் ஐயப்ப சேவா சமாஜம் அமைப்பு நடத்திய விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ரிஷிகள், முனிவர்கள் வேதங்கள் மூலமாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சனாதன தர்மத்தை அவர்கள் நிலை நாட்டுகின்றனர். "ஒரே பரமேஸ்வரா! ஒரே கடவுள்!" அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதையே மார்க்கம் சொல்கிறது.

சனாதன தர்மத்தில் அரசியலமைப்பு
மனிதர்கள் மட்டுமின்றி உலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு என்பது அவசியம். நமது ஆன்மா என்பது இந்திய அரசியலமைப்புதான். வேற்றுமையில் ஒற்றுமை நாம் தற்போது சொல்வதைதான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. நமது இந்திய அரசியலமைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டு உள்ளது.

புத்த மதத்திலும் சனாதன கருத்துக்கள்
தர்மம் மதம் தொடர்புடையது கிடையாது. அனைவரையும் உள்ளடக்கியதுதான் தர்மம். சனாதன தர்மத்தில் இருந்த கருத்துக்களும் தத்துவங்களும்தான் கி.மீ. 2 ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டு உள்ளது. நமது பாரதத்தை உருவாக்கியது சனாதன தர்மம்தான். நமது நாட்டுடைய எண்ணத்திலும் செயலிலும் சனாதன தர்மம் இருக்கிறது. சனாதன தர்மம் ஒரே பரமேஸ்வரா என்றுதான் சொல்கிறது.

உலகை படைத்த பரமேஸ்வரன்
இந்த பரமேஸ்வரன்தான் உலகத்தை படைத்தார். நாம் வேற்றுமையில் வாழ்கிறோம் என்று கூறப்படுகிறது. ஒரு மரத்தில் ஏராளமான இலைகள் உள்ளன. மரத்திலிருந்துதான் அந்த இலைகளுக்கும் சத்து செல்கிறது. இந்திய அரசியலமைப்பின் சாரம்சமே வேற்றுமையில் ஒற்றுமைதான். அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவாகவும் இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் தோன்றியது. அப்போதே நம் அரசியலமைப்பும் எழுதப்பட்டது.

நாட்டை உருவாக்கியது யார்?
மற்ற நாடுகளை போன்று ராணுவ வீரர்களாலும், அரசர்களாலும் இந்த நாடு உருவாகவில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்துடைய ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது. இந்து மதத்தில் மனிதனை கடவுள் படைத்தார் என்று சொல்லப்படவே இல்லை. இந்தியாவில் ராணுவம் மற்றும் பொருளாதாரத்தைபோல் ஆன்மீகத்திலும் வளர்வது அவசியம். அதற்கான வழி சனாதன தர்மம்.

இந்தியாவில் வலிமையான ஆட்சி
வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் தலைமை ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உடையதாகவும் மக்கள் மனதை புரிந்துகொள்வதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவை வலிமையான தலைமை ஆட்சி செய்து வருகிறது. ஆன்மீக வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி. சோமநாதர் கோயில் சொத்துக்களை கொண்டு ஆப்கானிஸ்தானில் கஜினி முஹம்மது கட்டிய காந்தகார் நகரத்தை அமெரிக்க குண்டுக்கள் அழித்தன. இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை தெரிந்துகொள்ளலாம்." என்றார்.












Click it and Unblock the Notifications