எண்ணெய் கசிவால் பெரிய ஆபத்து.. 20 சதுர கி.மீ-க்கு பரவி இருக்கு.. கடலோர காவல் படை ஆய்வில் அதிர்ச்சி!
சென்னை: வட சென்னையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் தாக்கம், 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளதாக இந்திய கடலோர காவல்படை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் மழைக்கு இடையே சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் மர்மமான முறையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் கசிவால் அங்குள்ள குடியிருப்புகளின் சுவர்களில் எண்ணெய் படிந்தது. வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கலந்த மழைநீர் புகுந்துள்ளது. மீன்பிடி படகுகளிலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் போது உடலிலும், உடையிலும் எண்ணெய் படிந்தது. அங்கு பெட்ரோலிய நாற்றமும் வீசியது. இதனால் தீ விபத்து ஏற்பட்டுவிடுமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடல் நீர் பரப்பில் எண்ணெய் படலம் பரவியுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன் வந்து வழக்காக பதிவு செய்து, விளக்கம் கேட்டு மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இந்த எண்ணெய் மணலி தொழிற்பேட்டை பகுதியிலிருந்து பக்கிங்காம் கால்வாயில் கலந்திருக்க வேண்டும். இந்த எண்ணெய் எங்கிருந்து வருகிறது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் குழு ஆராய்ந்தது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள மழை நீர் வெளியேறும் பகுதிக்கு அருகில் எண்ணெய்யுடன் தண்ணீர் கலந்து தேங்கியிருந்தது.
இதிலிருந்து இந்த எண்ணெய் வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஆய்வு நடத்தியபோது அங்கிருந்து வந்த மழை நீரில் எண்ணெய் படலம் ஏதும் இல்லை. சிபிசிஎல் வளாகத்திற்குள் தேங்கியிருந்த மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டபோது, தரையில் படிந்திருந்த எண்ணெயும் அந்த தண்ணீருடன் சேர்ந்து வெளியேறியிருக்கலாம். பிறகு மெதுமெதுவாக பங்கிங்கம் கால்வாயில் கலந்திருக்கலாம். இப்படி எண்ணெய் மிதப்பதை அகற்றும்படி சிபிசிஎல்லுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மழை நீர் கால்வாயுடன் கலக்கும் இடத்தில் உறிஞ்சிகளை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், சி.பி.சி.எல். நிறுவனம், சி.பி.சி.எல் மணலி சுத்திகரிப்பு நிலையத்தின் எந்தக் குழாயிலும் கசிவு ஏதும் இல்லை. மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட இடைவிடாத மழையால், சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மணலியின் பிற தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சி.பி.சி.எல், நிலைமையை புரிந்துகொண்டு தடையற்ற வகையில் ஆலையை இயக்கி, தமிழகத்துக்கு எரிபொருட்கள் வழங்குவதை உறுதி செய்தது. நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எண்ணூரில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் கசிவு, கடலில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளதாகவும், இது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்திய கடலோர காவல் படையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
கொற்றலை ஆற்றின் முகத்துவாரம் முதல் காசிமேடு துறைமுகம் வரையில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு எண்ணெய் கசிவு காணப்பட்டுள்ளதாக @IndiaCoastGuard நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.#oilspill #Ennore #cpcl #tnpcb pic.twitter.com/G2sIBI4tfC
— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) December 10, 2023
கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஆய்வு செய்ததில், எண்ணெய் கசிவு கடலில், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதியில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 20 சதுர கி.மீ தொலைவுக்கு பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது. எண்ணூர் முதல் காசிமேடு வரையிலான பகுதி மீன்பிடி பகுதி என்பதால், இந்த எண்ணெய் கசிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications