சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
சென்னை: கோடை விடுமுறையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் விதமாக நாடு முழுவதும் 9 ஆயிரத்து 111 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதில் தெற்கு ரயில்வே 239 சேவைகள் இயக்கப்பட உள்ளன.
கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்லவும், குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் மக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள். இதனால், ரயில், பேருந்துகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் வேகமாக விற்று வருகின்றன. இதன் காரணமாக பல பயணிகளும் டிக்கெட் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்: ரயில்வே போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று கடுமையான விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு கோடைக்கால சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் கூறுகையில், “சம்மரில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே 9,111 சேவைகளை இயக்க உள்ளது.
9,111 ரயில் சேவைகள்: கடந்த ஆண்டு சம்மரில் 6,369 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 9,111 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 2,372 சேவைகள் அதிகம் ஆகும். ரயில் பயணிகள் ஏசி பெட்டிகளில் கூட அத்துமீறி நுழைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 9 ஆயிரத்து 111 ரெயில் சேவைகள் இயக்கப்படவுள்ள நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் 19 சிறப்பு ரெயில்கள் என 239 சேவைகளாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தெற்கு ரெயில்வே மூலம் கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், புதுடெல்லி, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் சிறப்பு ரயில்: சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பயணிகளின் வசதிக்காக தேர்தலையொட்டி சிறப்பு ரெயில்களையும் அறிவித்துள்ளது. மேலும், இதைத்தவிர பல புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையங்களில் குடிநீர்: இதுமட்டும் இன்றி கோடை காலங்களில் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய மண்டல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கியமான ரயில் நிலையங்களில் விரிவான கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொபைல் செயலி: ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், நெரிசல் போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் நடை மேம்பாலங்களில் ரயில்வே பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் மொபைல் செயலி ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications