அன் ரிசர்வ்டு பெட்டியில் இஷ்டத்துக்கு ஏற முடியாது.. இனி 150 டிக்கெட்டுகள் மட்டுமே.. ரயில்வே அதிரடி முடிவு
சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களில் அன் ரிசர்வ்டு பெட்டியில் 100 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றாலும், மூன்று மடங்கு பயணிகள் பயணிப்பதை பார்க்க முடியும். குறிப்பாக, விடுமுறை மற்றும் விஷேஷ நாட்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். இனிமேல் ஒரு முன்பதிவில்லா பெட்டியில் 150 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இதனால் ரயிலுக்குள் தேவையற்ற குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவில் ரயில் பயணம் என்பது பயணிகள் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நாடு முழுவதும் இயக்கப்படும் பல ஆயிரம் ரயில்களில் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். தொலை தூர பயணம் என்றால் ரயிலில் பயணிப்பதே பாதுகாப்பானது மற்றும் சொகுசு என்பதால் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.

அன் ரிசர்வ்டு பெட்டியில் அதிக கூட்டம்
ஆனால், ரயில்களில் டிக்கெட் கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு பயணிகள் கடும் பாடு படவேண்டியுள்ளது. டிக்கெட் புக்கிங் ஓபன் ஆன சில மணி நேரங்களில் முக்கிய வழித்தடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடுகின்றன. இதனால், முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் பயணிகள் பயணிப்பதை பார்க்க முடிகிறது.
பொதுப்பெட்டியில் சுமார் 100 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றாலும் இதற்கு மூன்று மடங்கு பயணிகள் பயணிப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் விடுமுறை மற்றும் விஷேஷ நாட்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். கட்டுப்பாடற்ற அளவில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதால் பயணிகளும் அதிக அளவில் ஏறி பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் ரயிலுக்குள் தேவையற்ற குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
கும்பமேளா கூட்ட நெரிசல்
குறிப்பாக மகா கும்பமேளாவின் போது டெல்லி ரயில் நிலையத்தில் வாரணாசி செல்லும் ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்தனர். இதில், ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க வரம்பற்று டிக்கெட் வழங்கியதே காரணம் என்ற புகார் எழுந்தது. எனவே, வரும் காலங்களில் இதேபோன்று நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை கொண்டுவர ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது.
தலா 150 டிக்கெட்டுகள் மட்டும்
இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் டெல்லியில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. தொலை தூர ரயிலில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எளிதாக சொல்வது என்றால், சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் 2 பொதுப்பெட்டிகள் உள்ளன. 3 ரயில்கள் செல்கிறது என்றால் 12 பெட்டிகளுக்கும் ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என மொத்தம் 1,800 டிக்கெட்டுகள் மட்டும் ரயில் புறப்படக்கூடிய அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்கப்படும். இதனால் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிகள் எண்ணிக்கை இஷ்டத்திற்கு ஏறுவதை தடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
பயணிகள் கோரிக்கை
விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தினால், ஏற்படும் சாதகங்கள், பாதங்கள் குறித்து ஆய்வு செய்து அதன்பிறகு இது குறித்த நடைமுறைகள் வகுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்டுகிறது.
அதேவேளையில், ஏற்கனவே முன்பதிவு பெட்டியில் கூட டிக்கெட் எடுக்காமல் சிலர் அத்துமீறி பயணிக்க கூடிய சூழலில் முன்பதிவு இல்லாத பெட்டிக்கு கட்டுப்பாடுகள் விதித்து நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழக்கூடும் என்றும், இவையெல்லாம் ஆய்வு செய்து பயணிகளுக்கு பாதகம் இன்றி செயல்படுத்த வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications