கொல்லப்படும் பாலஸ்தீன் குழந்தைகள்.. ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது மனிதாபிமானமற்றது -எஸ்டிபிஐ
சென்னை: காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐநா சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்து இருப்பது நாடு பின்பற்றும் கொள்கைக்கு எதிரானது என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது, "சியோனிச ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள பொதுமக்கள் மீது பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியும், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும், மின்சாரத்தையும், குடிநீர், உணவுத் தேவையையும், மருத்துவ சேவையையும் துண்டிக்கும் இணையற்ற கொடூரம் தொடரும் நிலையில், அங்கு மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கான ஐநா தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருப்பது மனிதாபிமானமற்றது.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பாலஸ்தீன் விவகாரத்தில் பின்பற்றிவரும் கொள்கைக்கு எதிரானது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தை ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தின. சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் இந்தியத் தலைவர்களும் இந்த உண்மையை அறிந்திருந்த காரணத்தால் தான் அவர்கள் பாலஸ்தீனத்தை எப்போதும் ஆதரித்துள்ளனர்.
ஆனால், பாலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு பல தசாப்தங்களாக நம் நாடு பின்பற்றிவரும் நிலைப்பாட்டிற்கு முரணானது. 120 நாடுகள் ஆதரித்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் முன்வைத்த காரணம் ஏற்புடையதல்ல. இஸ்ரேலிய படையெடுப்பாளர்கள் அனைத்து சர்வதேச போர்ச் சட்டங்களையும் மீறியுள்ளனர். பொதுமக்களை எரிக்க வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்துகின்றனர். அவர்கள் மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது குண்டுகளை வீசுகிறார்கள்.

அவர்கள் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவியை மறுக்கின்றனர். அவர்கள் காசாவிற்கு தண்ணீர் மற்றும் எரிபொருளை மறுக்கிறார்கள். கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பெண்களை குறிவைத்து தாக்குகின்றனர். வரலாற்றில் இல்லாத மிகக்கொடூரம் அங்கு அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில், ஐ.நாவின் மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் புறக்கணித்திருப்பது நாடு பின்பற்றும் நிலைப்பாட்டுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications