ஓயும் ஐ.நா.. ஓங்கும் அமெரிக்கா.. பலே அரசியல்.. இந்தியா -பாக். உரசல் கற்றுத் தரும் பாடம்!

Subscribe to Oneindia Tamil

-ஆர். மணி

Recommended Video

    இந்தியா - பாக் பற்றி டிரம்ப் சூசகம்.. நல்ல செய்தி வருகிறது-வீடியோ

    சென்னை: சமீபத்திய இந்திய – பாகிஸ்தான் உரசலில் சில முக்கியமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. இவை எந்த ஓர் அரசியல் மற்றும் வரலாற்று மாணாக்கனுக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்தான்.

    ஒரு வழியாக சமீபத்தில் வெடித்த இந்திய – பாகிஸ்தான் பதற்றம் தற்போதைக்கு தணிந்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பெரிய அளவிலான ஒரு முழு போர் (full-fledged war) இப்போதைக்கு இல்லை என்று நாம் நம்புவதற்கான காரணங்கள் உறுதியானதாகவே இருக்கின்றன.

    இந்திய விமானப் படையின் விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் விடுவிக்கப் பட்டப் பின்னர் பதற்றம் தணிந்தது தெளிவானதாகவே அனைவருக்கும் புலப்படுகின்றது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தற்கொலைப் படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையின் 44 ஜவான்கள் கொல்லப் பட்ட பின்னர் ஏற்பட்ட பதற்றம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பாலாகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல், பின்னர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டு, மூன்று நாட்களில் விடுதலை ஆன பின்னர் முடிவுக்கு வந்தது. இது ஒரு தாற்காலிகமான அமைதிதான். சந்தேகமில்லை.. ஆனாலும் பதற்றம் குறைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    Indo - Pak crisis and new worlds dimensions

    இதற்கு முன்பும் இந்தியா பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர்கள், உரசல்கள் பல முறை நடந்திருக்கின்றன. போர்கள் என்றால் 1948, 1965, 1971 மற்றும் 1999 கார்கில் யுத்தம் என்று நாம் சொல்லலாம். உரசல்கள் பல முறை ஏற்பட்டிருக்கின்றன. இதில் முக்கியமானது, டிசம்பர் 13, 2001 ல் இந்திய நாடாளுமன்றம் தாக்கப் பட்டதை நினைவு கூறலாம். அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடும் பதற்றம் நிலவியது. கிட்டத்தட்ட 5 லட்சம் துருப்புகள் எல்லையில் குவிக்கப் பட்டன. எந்த நேரமும் போர் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

    Indo - Pak crisis and new worlds dimensions

    வாஜ்பாய் அப்போது பிரதமராக இருந்தார். அதிர்ஷ்டவசமாக ஒரு மாத காலத்தில், ஜனவரி 10 ம் தேதி, 2002 ல் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷரஃப் இறங்கி வந்தார். அவரது ஒரு பேட்டி நிலைமையை மாற்றியது. பேச்சு வார்த்தைகள் துவங்கியது. ஆனால் கடந்த 71 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு சமீபத்திய இந்திய – பாகிஸ்தான் உரசலில் சில முக்கியமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. இவை எந்த ஓர் அரசியல் மற்றும் வரலாற்று மாணாக்கனுக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்தான். இவற்றைப் பார்க்கலாம்.

    மங்கி வரும் ஐ.நா வின் பங்கு

    சமீபத்திய இந்திய பாகிஸ்தான் உரசலின் மிக முக்கியமான நிகழ்வு, ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் பங்களிப்பு. இரண்டு நாடுகளுக்கு இடையில் ஏற்படும் மோதல்களில் ஐ.நா மன்றம் தான் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலங்களிலும் இந்திய – பாகிஸ்தான் மோதல்களில், போர்களில் ஐ.நா. வின் பங்கு முக்கியமானதாகவே இருந்திருக்கின்றது. ஆனால் இந்த முறை ஐ.நா வை இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. பாகிஸ்தானாவது வாய்வார்த்தையாக ஐ.நா வின் பங்களிப்பு பற்றி பேசியது. ஆனால் இந்தியா ஐ.நா வின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.

    Indo - Pak crisis and new worlds dimensions

    தற்போது ஐ.நா. பொதுச் செயலாளராக இருப்பவர் ஆண்டனியோ கட்டரஸ் ( Antonio Guterres). போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர். இவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2021 வரையில் இருக்கிறது. '’இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையில் ஆண்டனியோ கட்டரஸ் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்திய சம்பவங்களிலும் ஆண்டனியோ கட்டரஸ் இரு நாடுகளும் கவனமாக நடந்து, பேச்சுவார்த்தைகள் மூலம் இரு தரப்பு சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினார். அத்தோடு நிறுத்திக் கொண்டார். அநேகமாக இந்திய – பாகிஸ்தான் பிரச்சனையில் ஐ.நா. மன்றம், தற்போதைக்கு கை கழுவி விட்டது என்று கூறலாம்’’ என்று பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான 'டான் (Dawn)’ தன்னுடைய தலையங்கத்தில் தெரிவித்திருப்பது முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.

    இது வரும் காலங்களில் சர்வதேச உறவுகளில் ஐ.நா வின் பங்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை கட்டியங் கூறி கொண்டிருக்கிறது. இது நிச்சயம் எந்த ஒரு நாட்டுக்கும், குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நன்மை பயக்கப் போவதில்லை. மாறாக பெருந் தீங்கைத் தான் கொண்டு வரப் போகிறது என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஐ.நா வின் இடத்தில் இன்று அமெரிக்கு வந்து நாட்டாமை செய்யத் துவங்கியிருக்கிறது. இதனது விளைவுகள் பார தூரமானவைதான்.

    அமெரிக்காவின் அதிகரிக்கும் தலையீடு

    மாறாக அமெரிக்காவின் பங்கு இந்திய – பாகிஸ்தான் உறவுகளிலும், உரசல்களிலும் மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பது சமீபத்திய சம்பவத்தில் தெளிவாகவே தெரிந்தது. சரியான உதாரணம், அபிநந்தனின் விடுதலையை ஆறு மணி நேரத்திற்கு முன்பாகவே அமெரிக்கா முறைமுகமாக ஆனால் உறுதியாக தெரிவித்தது. '’இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைய தீர்க்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். இதே போல வேறு சிலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். விரைவில் ஒரு நாகரிகமான செய்தி (decent news) வரும் என்றே எதிர்பார்க்கிறோம்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஆறு மணி நேரம் கழித்து அபிநந்தனின் விடுதலையை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.

    trump

    சவுதி அரேபியா, சீனா

    மற்றோர் முக்கியமான விஷயம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் சவுதி அரேபியா மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் பங்களிப்பு. சமீபத்தில் சவுதி இளவரசர் இந்தியா வந்தார். இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் (7 லட்சம் கோடி இந்திய ரூபாய்களுக்கு மேல்) முதலீடுகளை செய்ய இருப்பதாக கூறினார். இந்தியா வருவதற்கு முன்பு பாகிஸ்தான் போன சவுதி இளவரசர் பாகிஸ்தானில் சவுதி அரேபியா 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு முதலீடுகளை செய்ய இருப்பதாக கூறினார்.

    சீனா வுடனான பாகிஸ்தானின் உறவு இம்ரான்கான் பிரதமரானவுடன் மேலும் அதிகரித்திருக்கிறது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (China Pakistan Economic Corridor or CPEC) உருவாகியிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சீனா – பாகிஸ்தான் இடையே 60 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்களுக்கு இணையான வர்த்தகம் நடைபெறும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. ஆகவே இந்த பின்புலத்தில் பார்த்தால் இந்திய – பாகிஸ்தான் உறவில், உரசல்களில் ஏற்படும் போர் பதற்றத்தை தணிப்பதில் சவுதி அரேபியா மற்றும் சீனாவின் பங்களிப்பை நாம் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

    Indo - Pak crisis and new worlds dimensions

    இந்த இரண்டு நாடுகளை தவிர்த்து அமெரிக்காவின் பங்களிப்பை பற்றி நாம் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் 90 சதவிகித வலிமை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ராணுவ தளவாடங்கள், தொழில் நுட்பங்கள் இவற்றால்தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்த மூன்று நாடுகளும் மறைமுகமாக செலுத்திய அழுத்தத்தின் காரணமாகவே அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக் கொண்டது. ஆம். பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக் கொண்டது. அதனால்தான் இம்ரான்கான் அந்த முடிவை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பாகிஸ்தானில் இன்றுள்ள சிவிலியன் அரசாங்கத்தின் பிரதமர்தான் இம்ரான்கான். ஆனால் ராணுவ விவகாரங்களில், குறிப்பாக இந்தியாவுடனான உறவில் ராணுவத்தின் முடிவுதான் இறுதியானது. இந்த விவகாரத்தை நன்றாக புரிந்து கொண்டதால்தான் இம்ரான்கானால் பாகிஸ்தான் பிரதமராக நீடிக்க முடிகிறது. இல்லையென்றால் முடிவு என்னவென்பது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள், அதிபர்கள், குறிப்பாக ராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக், ஸுல்ஃபிகர் அலி புட்டோ மற்றும் பெனாசீர் புட்டோ ஆகியோருக்கு ஏற்பட்ட கதிதான் எந்த பாகிஸ்தான் ஆட்சியாளருக்கும் ஏற்படும் என்பது இம்ரான்கானுக்கு நன்றாகவே தெரியும்தான்.

    வர்த்தகமும், வெளியுறவுக் கொள்கைகளும்

    நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிப்பதில் வர்த்தகத்தின் பங்கு மகத்தானது மட்டுமல்ல, பல நேரங்களில் முதன்மையானது என்றும் நாம் கூறலாம். பல லட்சம் கோடிகளுக்கு முதலீடுகளை ஒரு நாட்டில் போடும் எந்தவோர் அந்நிய நாடும் குறிப்பிட்ட நாடு போரில் மாட்டிக் கொண்டு சிக்கி, சின்னபின்னமாவதை அனுமதிக்காது. இது ஒரு விதத்தில் உலக அமைதிக்கு நல்லதுதான். அதிலும் குறிப்பாக இரண்டு நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக இருந்தால் பெரிய முதலீடுகள் போடும் நாடுகள் தங்களது முதலீடுகளை காப்பாற்றிக் கொள்ள பெரிய முயற்சிகளை எடுக்கும். அதுதான் தற்போதய இந்திய – பாகிஸ்தான் உரசல்களிலும் நடந்திருக்கிறது. இதனை நாம் ஒரு விதத்தில் '’கெட்டதில் நல்லது’’ என்றே கூறலாம்.

    ஈரானின் பங்கு

    சமீபத்தில் இந்நிய – பாகிஸ்தான் விவகாரத்தில் புதியதாக ஒரு கதாபாத்திரம் வந்திருக்கிறது. அதுதான் ஈரான் நாடு. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் (Organization of Islamic Courntries or OIC) பேசினார். இந்தியா இதில் கலந்து கொண்டதால் பாகிஸ்தான் இதனை புறக்கணித்தது. ஆனால் OIC இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனம் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்தது. இது மோடி அரசுக்கு பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆனால் நிலைமையை இந்தியா சாதுர்யமாக கையாண்டது என்றே சொல்லலாம். ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நேரடியாக ஈரான் சென்றார் சுஷ்மா ஸ்வராஜ். அங்கு ஈரான் தலைவர்கள் தீவிரவாத விவகாரத்தில் இந்தியா வை ஆதரித்தினர். மேலும் பாகிஸ்தானில் இருந்து செயற்படும் தீவிரவாத அமைப்புகள் ஈரானில் நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்தால், இந்தியா மேற்கொண்டது போன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் எல்லைகளை கடந்து போய் தாங்களும் நடத்துவோம் என்று வெளிப்படையாகவே ஈரான் அறிவித்திருக்கிறது. மேலும் அதிகரித்து வரும் பாகிஸ்தான் – சவுதி அரேபிய உறவுகள் ஈரானுக்கு அதிக பதற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. காலங் காலமாய் ஈரானுக்கும் – சவுதி அரேபியாவுக்கும் இடையிலிருக்கும் மோதல்கள்தான் இதற்குக் காரணம்.

    sushma

    மோடியின் சாதனைகளும், அரசியல் லாப கணக்குகளும்

    ஒரு விதத்தில் பார்த்தால் மோடி பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த உண்மையான முயற்சிகளை மேற்கொண்டார் என்றே நாம் சொல்ல வேண்டும். 2014 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தான் பிரதமராக பொறுப்பேற்கும் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை மோடி அழைத்தார். இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிஃபும் கலந்து கொண்டார். பின்னர் 2015 டிசம்பர் 25 ம் நாள் வேறோர் நாட்டுக்கு சென்று விட்டு இந்தியா திரும்பும் வழியில் திடீரென்று பாகிஸ்தானின் லாகூரில் போய் இறங்கினார். இது வெளியில் முன் கூட்டியே அறிவிக்கப்படாத பயணம். அந்த நாள் நவாஸ் ஷெரீஃபின் பிறந்த நாள் மட்டுமல்ல, ஷெரீஃபின் பேத்தியின் திருமண நாளும் கூட. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீஃபின் தாயாரின் கால்களை தொட்டு வணங்கி, வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் மோடி.

    இந்தியாவின் இந்த நல்லெண்ண நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்ட தீவிரவாத தாக்குதல்கள்தான் தற்போதய போர் பதற்றத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஆனால் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்ட அதே மோடிதான் தற்போது தேர்தல்கள் நெருங்கி கொண்டிருப்பதால், புல்வாமா தாக்குதலுக்கு பிந்தய சூழலில் எழுந்திருக்கும் நிலைமையை தன்னுடைய அரசியலுக்கு, குறிப்பாக, வரவிருக்கும் மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் பெரு முயற்சிகளுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள துவங்கியிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Indo - Pak crisis and new worlds dimensions

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை ஜவான்களின் படங்களை போட்டு ராஜஸ்தானில் பாஜக தேர்தல் கூட்டத்தில் மோடி பேசுகிறார். இதனை ஒட்டு மொத்த எதிர் கட்சிகளும் '’ராணுவத்தின் உயிர் தியாகத்தை மலிவு அரசியலுக்கு மோடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்டிருக்கிறார்’’ என்று குற்றஞ்சாட்டுகின்றன. இந்த குற்றச் சாட்டை சுலபத்தில் எவரும் ஒதுக்கித் தள்ள முடியாது தான்.

    சமாதானத்தின் புதிய பரிமாணங்கள்

    சுருக்கமாக சொன்னால் சமீபத்திய இந்திய பாகிஸ்தான் மோதல்கள் சர்வதேச அளவில் முக்கியமான நாடுகள் எங்கே நின்று கொண்டிருக்கின்றன என்பதை நமக்கு நன்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. மற்றுமோர் முக்கியமான விஷயம், இனிமேல், எதிர் வருங் காலங்களில் இந்திய – பாகிஸ்தான் உறவுகளில் எத்தகைய பின்னடைவுகள் ஏற்பட்டாலும், அதில் சர்வ தேச சமூகம் உடனடியாகவும், ஏன் நேரடியாகவும் தலையிடும் சாத்தியக் கூறுகள் அதிகரித்தக் கொண்டிருக்கின்றன என்பதையும் நமக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கின்றது.

    இது இந்தியாவின் நீண்ட நாள் நலன்களுக்கும், இறையாண்மைக்கும் நன்மை பயக்குமா என்றால் அதற்கான பதில் சுலபமானதாக கிடைக்கும் என்று தெரியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+