இந்தூர் ஆபாச வீடியோ பிளாக்மெயில்.. 1 கோடி வழக்கில் சிக்கிய போலீஸ்! பின்னணியில் ஹனிடிராப் கும்பல்??
சென்னை: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரை ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி மிரட்டி 1 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இந்த மிரட்டல் மற்றும் மோசடி வழக்கில், காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ஒரு நபர் உள்பட 5 பேர் கொண்ட கும்பலை இந்தூர் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. மிரட்டல் கும்பலுக்கு போலீஸ் காவலர் ஒருவரே உடந்தையாக செயல்பட்டு கைதாகியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. அப்படி என்னதான் நடந்தது?
இந்தூர் பகுதியைச் சேர்ந்த ஹிதேந்திரா சிங் என்பவர், முதலில் மதுபான தொழிலும், பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வரும் ஒரு தொழிலதிபர் ஆவார்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்
தொழில் நிமித்தமாக நில பேரம் பேசுவதற்காக, இவருக்கு ஆல்கா தீட்சித் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த பெண் மூலமாக லக்கன் சிங் என்பவரும் தொழிலதிபருக்கு அறிமுகமாகியுள்ளார்.. தொழில் தொடர்பாக இவர்கள் 3 பேருமே சில காலம் பழகி வந்துள்ளனர்..
இந்நிலையில், ஆல்கா தீட்சித் என்ற பெண் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 16 முதல் 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தொழிலதிபர் ஹிதேந்திரா சிங்கிற்கு தெரியவந்துள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஆல்கா தீட்சித் மற்றும் லக்கன் சிங் ஆகியோருடனான அனைத்து வகையான தொடர்புகளையும் உடனடியாக துண்டித்துக் கொண்டுள்ளார்.. இதனால் அந்த கும்பல், தொழிலதிபர் ஹிதேந்திரா சிங்கிடம் இருந்து பெரிய தொகையை பறிக்க திட்டமிட்டுள்ளது..
ஆபாச வீடியோக்கள்
தங்களிடம் தொழிலதிபரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதாகக் கூறி, அவரிடம் தொடர்ந்து மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.. தொழிலை நிம்மதியாக தொடர வேண்டும் என்றாலும், குடும்ப மானம் காக்கப்பட வேண்டும் என்றாலும் தங்களுக்கு உடனடியாக 1 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என ஆல்கா தீட்சித், அவருடைய மகன் ஜெய்தீப் தீட்சித் மற்றும் லக்கன் சிங் ஆகியோர் சேர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.
பணம் தராவிட்டால் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நற்பெயரைக் கெடுத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.. சம்பவ இடத்தில் எந்த வீடியோவையும் காட்டாமல், வீடியோ இருப்பதாகக் கூறியே இந்த மிரட்டல் நடந்துள்ளது.. இந்த கும்பலுடன் ஸ்வேதா ஜெயன் என்ற மற்றொரு பெண்ணும் இணைந்து கொண்டு தொழிலதிபருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்..
போலீஸ் கான்ஸ்டபிள்
இந்த சூழலில், வினோத் சர்மா என்ற போலீஸ் கான்ஸ்டபிள் இந்த கும்பலுடன் கைகோர்த்துள்ளார்.. அவர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவது போல நடித்து, தொழிலதிபர் ஹிதேந்திரா சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணம் பறிக்க முயன்றுள்ளார்.. போலீஸ்காரரே மிரட்டலில் இறங்கியதால் தொழிலதிபர் ஹிதேந்திரா சிங், இந்தூர் காவல் துறையில் முறையான புகார் அளித்துள்ளார்..
காவல் துறை துணை ஆணையாளர் ராஜேஷ் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் போலீஸ் கான்ஸ்டபிள் வினோத் சர்மா இந்த மிரட்டல் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து மிரட்டல் விடுத்த ஆல்கா தீட்சித், ஜெய்தீப் தீட்சித், லக்கன் சிங், ஸ்வேதா ஜெயன் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் வினோத் சர்மா ஆகிய 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தற்போது தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..!!












Click it and Unblock the Notifications