அதிமுகவில் வாரிசுகளின் போர்? 29 MLAs அதிருப்தியாம்.. பிரபல விமர்சகர் கருத்து
சென்னை: அதிமுக தனது 53 ஆம் ஆண்டு விழாவை நிறைவு செய்திருக்கும் நிலையில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இருவர்களின் மகன்களுக்கு இடையே மறைமுகமாகப் பனிப்போர் நடந்து வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதிமுக எம்.ஜி.ஆர் உருவாக்கி 53 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், '2026 தேர்தல் வெற்றிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அது என்ன மாதிரியான தியாகம் என்பது தெளிவு இல்லை. மக்களவைத் தேர்தல் முடிந்த உடனேயே அதிமுக முக்கிய தலைவர்கள் எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி வற்புறுத்தினார்கள் என்று ஒரு தகவல் கசிந்தது. ஆனால், ஒற்றை தலைமைதான் என கூறி எடப்பாடி மறுத்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.

இதனிடையே தான் மீண்டும் அதிமுகவுக்குள் ஒரு உரசல் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக இரு பெரும் தலைவர்களின் மகன்களுக்கு இடையே பனிப்போர் நடந்து வருவதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது. மேலும் அதில் ஒரு தலைவரின் உறவினர் ஒருவரும் ஜேபி நட்டாவும் கோவையில் சந்தித்து பேசியதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவில் உள்ள 29 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சில விசயங்களைத் தெரிவித்துள்ளார். ரவீந்திரன் பேசுகையில், "எடப்பாடி மேம்போக்காகச் சொன்னதைப் போலத்தான் தெரிகிறது. அதே அறிக்கையில் 'உட்பகை' என்றும் 'களை எடுத்துவிட்டோம்' என்று இரண்டு சொற்களை அவர் பயன்படுத்தி இருக்கிறார். ஓபிஎஸ் தனியாக அதிமுகவை மீட்போம் என்கிறார்.
டிடிவி தினகரன் தனிக் கட்சியாகிவிட்டார். சசிகலா தன் தலைமையில் அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்கிறார். யாரும் எடப்பாடியிடம் கட்சியில் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை. போய் நிற்கவும் இல்லை.
ஆனால், அதிமுகவுக்கு எடப்பாடிக்கு எதிரான ஒரு அழுத்தம் இருப்பது உண்மை. அதற்காகவே தியாகம் என்ற வார்த்தையைச் சொல்லி இருக்கிறார். எடப்பாடி மாவட்டச் செயலாளராக இருந்து கட்சியின் தலைமைக்கு வந்தவர். அவருக்கு அரசியல் தெரியும். ஒற்றை தலைமை என்பதில் அவர் உறுதியாக நிற்கிறார். ஜெயலலிதாவுக்கு பலம் இருந்தது, அவர் ஒற்றை தலைமையாக இருந்தார். அதே பலம் எடப்பாடிக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்வி.
கட்சிக்குள் உள்ள 29 எம்.எல்.ஏக்களின் மனநிலை என்பது எடப்பாடியை நம்பி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பதவிக்கு வரமுடியாது என்பதாகவே இருக்கிறது. தங்கமணி, வேலுமணிக்கும் இதே நிலை நீடித்தால் அடுத்த முறை அமைச்சராவது கடினம் என்ற சோர்வு வந்துவிட்டது போல தோற்றம் தெரிகிறது. அதனால்தான் அவர் எம்பி தேர்தல் முடிந்தவுடன் பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்து இருந்தால் சில சீட்டுகளை ஜெயித்து இருக்கும் என்று சொல்லி இருந்தார். கொங்கு மண்டலத்தில் அதிமுக 17% கீழே சென்றுவிட்டது. அண்ணாமலை 20% வாக்குகளைப் பெற்றுவிட்டார். அதை உணர்ந்துதான் வேலுமணி அப்படிப் பேசினார்.
கன்னியாகுமரியில் அதிமுக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4% போய்விட்டது. அங்கே அதிமுகவுக்குப் பலமாக இருப்பவர் தளவாய் சுந்தரம் தான். அவரையே எடப்பாடி நீக்கிவிட்டார். தனக்குக் கட்டுப்பட்டவர்கள் மட்டுமே அதிமுகவில் நீடிக்க முடியும் என்ற எடப்பாடியின் மனநிலையைத் தான் இது காட்டுகிறது. ஜெயலலிதா இருந்த காலத்தில் வாக்குவங்கி 40% இருந்தது.
தினகரன் உடைந்தபோது கொஞ்ச வாக்குகள் சிதறின. ஓபிஎஸ் உடைந்த பிறகு தென்மாவட்டங்களில் 33% இருந்த கட்சி 20%க்கும் கீழே சென்றுவிட்டது. 13% வாக்குகளை ஓபிஎஸ் பிரிவால் அதிமுக இழந்துள்ளது. இது மிகப்பெரிய பின்னடைவு. இன்றைக்கு அதிமுகவின் வாக்குவங்கி என்பது 20%. இன்னும் இந்த பனிப்போரால் முக்கியஸ்தர்கள் வெளியேறினால் இன்னும் அதிமுக பலவீனமாகிவிடும்.
கோவை, கன்னியாகுமரி என சில இடங்களில் பாஜகவைவிட அதிமுக பலவீனமாகிவிட்டது. சேலம் பகுதியில் மட்டும்தான் பாமக களத்திலிருந்தும் வன்னியர்கள் எடப்பாடிக்கு அதிக அளவில் வாக்குகளை அளித்துள்ளார்கள். அதற்குக் காரணம், வன்னியர்களுக்கு எடப்பாடி 10.5% உள் ஒதுக்கீடு அளித்தார் என அவர்கள் நம்புகிறார்கள். மற்றபடி தமிழ்நாட்டில் எடப்பாடிக்கு வேறு தொகுதிகளில் செல்வாக்கு இல்லை. இதே நிலை தொடர்ந்தால், அதிமுக வரும் காலங்களில் பல தோல்விகளைச் சந்திக்கும்" என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.












Click it and Unblock the Notifications