ஒரே நாளில்.. பல லட்சம் ஊழியர்களுக்கு இன்போசிஸ் அனுப்பிய முக்கிய மெயில்.. எதிர்பார்க்கவே இல்லையே!
சென்னை: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ், அதன் ஊழியர்களுக்கான ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு செயல்முறையைத் (Performance Review) தொடங்கியுள்ளது. இதன் மூலம், 2026-ஆம் ஆண்டில் சம்பள உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் பலருக்கும் இதற்காக மெயில் அனுப்பப்பட்டு உள்ளது.
பணியாளர்கள் அனைவரும் அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு செயல்முறையை முடிக்குமாறு மனிதவளத் துறையிலிருந்து மின்னஞ்சல் பெறப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு பணியாளர் கருத்துத் தெரிவிக்கையில், "இது வழக்கமான ஒன்றுதான், ஆனால் கடந்த ஆண்டைப் போலன்றி, இந்த முறை நிறுவனம் எங்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் என நம்புகிறோம்" என்றார்.

இன்போசிஸின் ஆண்டு Review Cycle அக்டோபரில் தொடங்கி செப்டம்பரில் முடிவடைகிறது. வழக்கமாக, ஊழியர்களின் மதிப்பீடுகள் ஜனவரி மாதத்திலும், சம்பள உயர்வுக்கான கடிதங்கள் ஜூன் மாதத்திலும் வழங்கப்படும்.
இன்போசிஸ் சம்பள உயர்வு
முன்னதாக, FY22 நிதியாண்டில் பணத்தைச் சேமிக்கும் நோக்கில் சம்பள உயர்வுகளை நிறுத்திய இன்போசிஸ், நவம்பர் 1, 2023 முதல் சம்பளத்தை உயர்த்தியது. FY24 நிதியாண்டுக்கான ஆண்டு மதிப்பீடு தாமதமாகி, ஜனவரி மற்றும் ஏப்ரல் 2025 என இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது.
இன்போசிஸ் பின்னணி
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 3,23,000 ஊழியர்கள் உள்ளனர். செப்டம்பர் 2023 முதல் அக்டோபர் 2024 வரையிலான மதிப்பீட்டுக் காலத்திற்கான முந்தைய சம்பள உயர்வு, தகுதியான ஊழியர்களுக்கு டிசம்பர் 2024-இல் வழங்கப்பட்டது.
இன்போசிஸ் அதன் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை அக்டோபர் 16, வியாழக்கிழமை அன்று அறிவிக்க உள்ளது. இதற்கிடையில், டிசிஎஸ் நிறுவனத்திலும் செயல்திறன் மதிப்பீடு நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஊழியர்கள் A, B, C, D என மதிப்பிடப்படுகிறார்கள், A என்பது மிக உயர்ந்த மதிப்பெண்.
இன்போசிஸ் புதிய முறை
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கிடையே சரியான சமநிலையை உறுதி செய்யும் நோக்கில், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 9.15 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் வேலை நேரம் நிறைவடைந்ததை நினைவூட்டும் விதமாக எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படும்.
இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையைப் பராமரிப்பது ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்டகால தொழில்முறை வெற்றிக்கு மிக முக்கியமானது" என்று மின்னஞ்சல்கள் மூலம் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், ஊழியர்களின் பணி நேரத்தில் கடுமையாக கவனம் செலுத்துகிறது. ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எச்சரிக்கை மெயில்களை அனுப்பும் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இத்தகைய நடவடிக்கை, நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்துக்கு முரணாக இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவன ஊழியர்களின் வேலை நேரம்
சமீபத்தில், கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழாவில் பேசிய நாராயண மூர்த்தி, இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். நாம் மிக சரியான காலத்தில் உள்ளோம். இது போன்ற சாதகமான சூழ்நிலை அமைவது கடினம். இந்த இளைஞர்கள் பலத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்ஃபோசிஸ் உருவாக்கிய போது அதை உலக தரத்திற்கு கொண்டு செல்வோம். உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டி போட வைப்போம் என்று கூறினேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு மாற்றுவேன் என்று சொன்னேன். அதற்காக உழைத்தேன்.
சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நான் சும்மா இல்லை.. அதற்காக உழைத்தேன்.. 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவதோடு இருக்க கூடாது. கடினமாக உழைக்க வேண்டும். 10 மணி நேரத்திற்கும் மேல் இருக்க கூடாது. இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் உள்ளனர். நாம் கடினமாக உழைக்கும் நிலையில் நாம் முன்னேற முடியும். நாம் கடினமாக உழைத்து இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும், என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications