‛‛இனிமே இப்படித்தான் வேலு’’.. பாஜகவிடம் ஆதரவு கேட்ட ஈபிஎஸ்-ஓபிஎஸ்.. மதுவந்தி சொன்னத கவனிச்சீங்களா!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் தரப்பும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இருதரப்பினரும் நேற்று சென்னையில் உள்ள கமலாலயத்துக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில் ‛‛இனிமே எல்லாமே இப்படித்தான் வேலு'' என சினிமா பட டயலாக்கில் பாஜகவின் மதுவந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா எம்எல்ஏவாக இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். பிப்ரவரி 27 ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு களமிறங்க உள்ளது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமாகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. கமலாலய வாசலில் காத்திருந்த அதிமுக தலைகள்? ட்ரெண்டாகும் #saveadmk
எடப்பாடி-ஓபிஎஸ் அணி போட்டி
இந்நிலையில் தான் நேற்று காலையில் ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தன் தரப்பிலும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி தனித்தனியாக போட்டியிட உள்ளனர். இருவரும் இரட்டை சிலை சின்னத்துக்கு உரிமை கோரினால் அது முடக்கப்பட வாய்ப்புள்ளது. இது நடந்தால் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடும் சூழல் உருவாகும்.
அண்ணாமலையுடன் சந்திப்பு
இதையடுத்து நேற்றே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோர தொடங்கியது. தமாக தலைவர் ஜிகே வாசனை இருதரப்பும் சந்தித்து பேசியுள்ளது. அதேபோல் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அவரது அணியின் கமலாலயம் சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.
மில்லியன் டாலர் கேள்வி
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடுத்தடுத்து ஆதரவு கோரியுள்ள நிலையில் பாஜவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தான் பாஜக அலுவலகம் சென்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் தரப்பும் ஆதரவு கேட்டுள்ளது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மதுவந்தி கருத்து
இந்நிலையில் தான் பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு நேற்று தனித்தனியே சந்தித்து ஆதரவு கோரியது பற்றிய அக்கட்சியை சேர்ந்த மதுவந்தி கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இவர் உள்ளார். அதாவது ட்விட்டரில் ஒருவர், அண்ணாமலையை ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசியது தொடர்பான படத்தை வெளியிட்டு, ‛‛முதல் முறையாக அதிமுக தலைவர்கள் பாஜக அலுவகம் வந்து வரும் இடைத்தேர்தலில் ஒருமித்த வேட்பாளர் நிறுத்துவது குறித்து ஆலோசித்து உள்ளன'' என ட்விட் செய்திருந்தார்.
‛இனிமே இப்படித்தான் வேலு’
இதற்கு தான் மதுவந்தி பதிலளித்துள்ளார். அதில், ‛‛இனிமே இப்படித்தான் வேலு'' என்ற டயலாக் தான் என் நினைவுக்கு வருகிறது. அதிமுகவினர் கமலாலயத்தக்கு வந்ததில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டரில் சிலர் முன்னும் பின்னுமாக செல்வதை கண்டு வியப்படைகிறேன். இதுதான் அண்ணாமலையில் ஆரம்பம்'' என தெரிவித்துள்ளார்.