ஆளும் கட்சி மீது மட்டும் கேமரா போக்கஸ் பண்ணாமல்.. திமுகவை மறைமுகமாக விமர்சித்த பிரேமலதா
சென்னை:ஆளுங்கட்சியை மட்டும் கேமரா ஃபோகஸ் செய்யாமல், சட்டமன்றத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நேரலையில் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சரிசமமான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசினார். இது மறைமுகமாக திமுகவை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
திமுக ஆட்சியில் தற்போது நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், கேமராக்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் அவர்கள் பேசும் பகுதிகளை மட்டுமே காட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் பேசும்போது அல்லது அமளியில் ஈடுபடும்போது கேமராக்கள் அவை காட்சியிலிருந்து விலகி விடுவதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. பிரேமலதா இதனைத்தான் "சரிசமமான வாய்ப்பு" தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசியுள்ளார் .

சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தார்கள் நம்முடைய முன்னாள் முதல்வர்கள்.. அதற்கு சுற்றியுள்ள புகைப்படங்களே சாட்சி. அந்த மாண்பும் மரபும் இமி அளவும் மாறாமல், அண்ணன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவர்கள், அவை தலைவராக நடுநிலையோடு இருந்து, ஒரு தராசு போல் இருந்து, இந்த அவையில் அத்தனை பேருக்கும் சரிசமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும்.. நீங்கள் ஆணாக இருந்தாலும், இந்த அவைக்கு அன்னையாக இருந்து சமமான வாய்ப்பு தர வேண்டும் என்று.. இந்த புனிதமான அவையில் அவரை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அது மட்டுமல்ல.. அன்பு தம்பி முதல்வர் விஜய் அவர்களுக்கு அண்ணனாக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இதே அவையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். இந்த சட்டசபையில் ஆளும் கட்சியை மட்டும் கேமரா போக்கஸ் பண்ணாமல், சட்டமன்றத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நேரலையில், தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த ஒரு சரிசமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மட்டுமின்றி, அதிமுக ஆட்சியின் போதும் (குறிப்பாக 2011 முதல் 2021 வரை), சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதும், அவை மக்களிடம் சென்றடையாமல் ஆளும் கட்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டதையும் மறைமுகமாக நினைவூட்டியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த். சட்டமன்றம் என்பது ஆளும் கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல; அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்குமானது .. பாநாயகர் நடுநிலையாகச் செயல்பட்டு, எதிர்க்கட்சிகளின் வாதங்களையும் மக்கள் பார்க்க வகை செய்ய வேண்டும் என்பதே பிரேமலதா விஜயகாந்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.














Click it and Unblock the Notifications