மீண்டும் விடுதலை புலிகள்.. ரகசிய திட்டம்.. “மே 18ல் பழிவாங்க?” - உளவுத்துறை அவசர எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பிரதமர் பதவியிலியிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவி மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும், இலங்கையில் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் பயிற்சி.. இலங்கைக்காகவும் போர் விமானங்கள் இயக்கம்.. உக்ரைனின் இரட்டை வேடம்
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக அதிகரித்தது. பொருளாதார சீர்கேட்டை அடுத்து அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு வெளியே இலங்கை அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது அவருடைய ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து கொழும்புவில் வெடித்த வன்முறையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
ராஜபக்சே ராஜினாமா
இலங்கையில் நடந்த கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி உள்ளிட்ட பலர் பலியாகினர். பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் என பலரது வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நிலைமை கைமீறியதைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டு தலைமறைவானார். ஆனாலும் இலங்கையில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ரணில் விக்ரமசிங்கே
மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபாய ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இலங்கையின் 26-வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கே ஆறாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
விடுதலை புலிகள்
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவி மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக தமிழக கடலோர பாதுகாப்புப் படைக்கு படைக்கு ரகசிய தகவல் கொடுத்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பலரும் கடல் வழியாக தமிழகம் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் பலர் முன்னாள் விடுதலை புலிகள் இயக்கத்தினராக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள்
ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்ற பிறகும், இலங்கையில் உள்நாட்டுப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே விடுதலை புலிகள் அமைப்பினர் இலங்கை மீது தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மே 18 மற்றும் 19 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, தமிழத்தில் ஊடுருவியிருக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதனடிப்படையில், கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீண்டும் இலங்கையில்
மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், வெவ்வேறு நாடுகளில் இருந்து திட்டம் தீட்டி, இலங்கையில் மீண்டும் தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராகலாம் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அதற்காகவே விடுதலை புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கடலோர மாவட்டங்களின் வழியாக தமிழகத்தில் ஊடுருவியிருக்கலாம் என உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிர கண்காணிப்பு
கடலுக்குச் செல்லும் மீனவர்கள், கடல் பகுதியிலும் சர்வதேச கடல் எல்லையிலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டால் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களாக தமிழகத்தில் சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி திரட்டல்
செயலற்ற வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்து பெரும் தொகையை மோசடியான முறையில் எடுப்பதற்காக மும்பை செல்ல முயன்ற ஒரு பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டும் பணியில் நியமிக்கப்பட்டவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இதுபோன்ற சம்பவங்கள் விடுதலை புலிகள் அமைப்பினர் இப்போதும் செயல்பட்டு வருவதை உணர்த்துவதால் தற்போது பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மட்டத்திலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.