ரூட்டு மாறுதே.. "நண்பராக என்னை சந்திக்கலாம்".. நயினார் நாகேந்திரனுக்கு டிடிவி தினகரன் பதில்
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலயகியதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனும் வெளியேறினார். கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றும், கூட்டணியை முறையாக கையாளத் தெரியவில்லை என்றும் பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து வரும் நயினார் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும், அவர்கள் அழைத்தால் நான் பேச தயாராக என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் நண்பராக எப்போது வேண்டுமானாலும் என்னைத் சந்திக்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கூட்டணியில் பிளவு
தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கொடுத்த பதில் மிகவும் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
நயினார் மறுப்பு
இதைத்தொடர்ந்து, கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான் காரணம் இல்லை என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும், நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக பாஜக சார்பில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும். தேவைப்பட்டால் நானே அவர்களிடம் நேரடியாக சென்று பேசுவேன் என்று சொல்லி இருக்கிறேன்.
நண்பராக..
கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் அழைத்தால் நானே போய் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் நானே போய் அழைப்புக் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் நண்பராக எப்போது வேண்டுமானாலும் என்னைத் சந்திக்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நயினார் மீது கோபம் இல்லை
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது: சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமையும், மகிழ்ச்சியையும் தருகின்ற விஷயம். நேர்மையான நல்ல மனிதர். நயினார் நாகேந்திரன் எனக்குத் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்காக எல்லா காரணங்களையும் சொன்னேன். மற்றபடி அவருக்கும், எனக்கும் எந்தவித மனவருத்தமும், கோபமும் கிடையாது.
என்னுடைய தொலைபேசி எண் அவரிடம் உள்ளது. அவர் நண்பராக என்னிடம் எப்போது வேண்டுமானாலும் பேசலாம், சந்திக்கலாம். செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். கண்டிப்பாக அவருடைய முயற்சி வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications