வெண்ணிலவே..வெண்ணிலவே! சர்வதேச நிலவு தினம்..அடேங்கப்பா நிலாவுல இவ்வளவு விஷயம் இருக்கா! ஆச்சரிய தகவல்!
சென்னை: சர்வதேச நிலவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், 52 ஆண்டுகளுக்கு பிறகு நிலவு குறித்த ஆய்வுகள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை கணக்கிட, மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவேளை நிலவு எனும் துணைக்கோள் இல்லாமல் இருந்திருந்தால், பூமயில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் கூட போயிருக்கும்.

பூமியை நோக்கி வரும் பல விண்கற்களை நிலவு தன் முதுகில் வாங்கிக்கொள்கிறது. இதனால் பூமிக்கான ஆபத்து வெகுவாக குறைகிறது. அதேபோல பூமி 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுவதால்தான் மழைக்காலம், கோடைக்காலம், குளிர்காலம், முன்பணி, பின்பணி, வேனிற்காலம் என 6 வகையான காலநிலைகள் இருக்கின்ற. இந்த காலநிலைகள் உயிர்களின் பெருக்கத்திற்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நிலவு இல்லை என்றால் இந்த பருவ காலங்கள் இல்லாமல் போய்விடும்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், நிலவு இல்லை என்றால் பூமியின் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை ஏற்படும். ஒழுங்கற்ற தன்மை பூமியை அழித்துவிடும். எனவேதான் நிலவு குறித்த ஆய்வுகளுக்கு விஞ்ஞானிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இன்றைய தேதியிலிருந்து சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் முதல் முறையாக நிலவின் காலடி வைத்தான். இதனை கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 20ம் தேதி சர்வதேச நிலவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மனிதனின் நிலவுப் பயணம் அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. உயிரிழப்புகள், நோக்கங்கள் சரியாக நிறைவேறாதது என ஏராளமான பின்னடைவுகள் இருந்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் இந்த பயணம் சாதித்து காட்டியிருக்கிறது.
நாம் நினைத்திருந்தால் ரோபோட்டை நிலவுக்கு அனுப்பி அதன் மூலம் தேவையான தகவல்களை பெற்றிருக்கலாம். மனிதனை நிலவுக்கு அனுப்பியதை விட இதற்கு செலவு குறைவாகதான் ஆகியிருக்கும்.
ஆனால், 1969ல் இதே தேதியில் நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மனிதர்கள் மத்தியில் பெரும் அறிவியல் எழுச்சியை பாய்ச்சியது. ஏறத்தாழ எல்லோரும் நிலவு குறித்து படிக்க தொடங்கினார்கள். விண்வெளியை புரிந்துக்கொண்டார்கள். மூடநம்பிக்கைகள் தகர்ந்தன. வெல்லக்கட்டியை பார்த்த எறும்பை போல மக்கள் அறிவியலை நோக்கி வந்தார்கள். பழமைவாத சித்தாந்தங்களை கொண்ட நாடுகள் கூட, பள்ளிகளில் விண்வெளி துறை சார்ந்த பாடங்களை கட்டாயமாக்கியது. இது சாதாரண விஷயமல்ல!
ஆனால், கடைசியாக 1972ல் மனிதர்கள் நிலவுக்கு செல்வது நின்றுபோனது. அதிக பொருள் செலவு, அதிக ரிஸ்க், நிலவில் கல், மண்ணை தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்தது போன்றவை நிலவுக்கான மனித பயணங்களை முடிவுக்கு கொண்டு வந்தது.
ஆனால் சுமார் 52 ஆண்டுகள் கழித்து தற்போது நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. செவ்வாய் கிரகத்திற்கு ரோவர்கள் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அங்கு மனிதர்களை குடியேற வைக்கும் பிளானை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், பூமியிலிருந்து செவ்வாய்க்கு போவதை விட நிலவிலிருந்து அங்கு போவது ஈஸி.
எனவே, நிலவில் மனிதர்களால் இயக்கப்படும் விண்வெளி ஆய்வு தளத்தை அமைக்க மேற்குறிப்பிட்ட நாடுகள் முயன்று வருகின்றன. சர்வதேச நிலவு நாள் கொண்டாடப்படும் இந்த தினத்தில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்பதே அறிவியல் ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications