இணையத்திற்கு அடிமையானோம்.. என்று அதிலிருந்து மீள்வோம்?
சென்னை: 2019ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறோம். கடந்த காலத்தைப் போலவே, இந்த ஆண்டும் நாம் மறந்து போன சில விஷயங்களைப் பார்க்கலாம்.
வாட்ஸப், முகநூல், ட்விட்டர் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். விடிய விடிய சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நாம் நம்மிடம் உள்ள உறவுகளை மற்றும் பாரம்பரியத்தை மறந்து வருகிறோம்.
இணையம் இல்லாத காலத்தில் நாம் வாழ்ந்த போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம். மாலையில் பள்ளி விட்டு வந்து மண்ணில் ஆசை தீர பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடினோம். ஆனால் வெயிலோடு விளையாடி என்ற காலம் போய் செல்லோடு உறவாடி என்ற காலத்திற்கு அடிமையாகி விட்டோம்.
சேர்ந்து சாப்பிட முடியலை
நாமெல்லாம் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப் பேசிகிட்டே உணவைச் சாப்பிடுவோம். இப்போ ஒரு கையில் போன் மறுகையில் சாப்பாடு. இணையம் பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறார்கள். தட்டில் உணவு இருக்கிறதா என்றுக் கூடத் தெரியவில்லை. அது மட்டுமா.. இணையம் மூலமாக நண்பர்களைத் தேடும் நாம், நம்முடனே இருக்கும் உறவுகளை மதிக்கத் தவறி விடுகிறோம்.
ஆளுக்கு ஒரு போன்
இன்று வீட்டில் பக்கத்து அறையில் இருக்கும் நபரை அழைக்கக் கூட கைப்பேசியை பயன்படுத்துகிறோம். பக்கத்திலேயே கணவன் இருக்க மனைவி அல்லது மனைவி இருக்க கணவன் வேறு யாருடனோ இணையம் மூலமாகத் தொடர்பில் இருப்பார்கள். அதனால் இப்போது நாட்டில் எத்தனைக் கொலைகள், எத்தனைப் பாலியல் வன்முறைகள்.
மனிதம் மறந்தாச்சு
அழகாக இயற்கையை ரசித்து மனிதர்களை மதித்து வாழ்ந்தோம் ஆனால் இன்று எல்லாவற்றையும் தொலைத்து இணையம் என்ற சிறு வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கிறோம். அது மட்டுமல்ல இணையம் இல்லாத உலகத்தில் உடல் உழைப்பு இருந்தது. அன்று மளிகைச்சாமான், உணவு, விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாங்க வெளியில் செல்வார்கள். ஆனால் இப்போது எல்லாவற்றையும் இணையத்தில் ஆர்டர் செய்தால் போதும். அனைத்துப் பொருட்களும் நம் வீடு தேடி வந்து விடும்.
அடிமையாகி விட்டோம்
சிறு குழந்தைகள் கூட இன்று இணையம் மூலமாகப் பாட்டுக் கேட்கிறார்கள். இவ்வாறு கொடுப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிப் பாதிக்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தவுடன் தங்கள் அலைபேசிகளை பிள்ளைகளிடம் கொடுக்கின்றனர். அவர்கள் ஏதோ இணைய விளையாட்டுகளைக் கண்டுபிடித்து அதற்கு அடிமையாகி இறுதியில் உயிர் போகும் அளவிற்கு வந்து விடுகிறது.
உறவுகளுடன் நேரம் செலவிடுங்க
வீட்டில் இருக்கும் நேரத்தில் பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள் பெற்றோர்களே. இன்று ஒரு வீட்டில் இணையத் தொடர்பு இல்லையென்றால் அது கௌரவக் குறைச்சலாக நினைக்கும் அளவிற்கு வந்திருக்கிறோம். இன்றைய நிலையில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அது போல இணையம் நம்மை அடிமையாக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
தூக்கம் வராமல் தவிப்பு
இணையத்தால் இன்று தூக்கம் குறைந்துள்ளது. நாமெல்லாம் இரவு சீக்கிரம் படுத்து அதிகாலையில் எழுவோம் ஆனால் இன்றைய தலைமுறையினர் பேஸ்புக் ட்விட்டர் போன்றவற்றை உபயோகப்படுத்தி விட்டு காலையில் லேட்டாக எழுகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒரு விஷயத்தை நாம் மறந்து வருகிறோம் அல்லது இழந்து வருகிறோம். 2019லும் அப்படியே தான் நடந்தது.
மாற முயற்சிப்போம்
இணையத்திற்கு மிகப் பெரிய அளவில் அடிமையான ஆண்டாக கூட இதை நாம் சொல்லலாம். சமூக வலைதளங்களைப் பார்த்தாலே அது தெரியும். இப்படியெல்லாம் மாறிப் போயுள்ள நாம் வரும் 2020ம் ஆண்டிலாவது இவற்றுக்கெல்லாம் விடை கொடுத்து உறவுகளை மேம்படுத்துவதிலும், பேணிக் காப்பதிலும் கவனம் செலுத்துவோமா?.
- ஜி. உமா மகேஸ்வரி