சீமான் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கொந்தளித்த திருச்சி எஸ்பி.. உடனே பறந்த கிரிமினல் அவதூறு நோட்டீஸ்
சென்னை: தமிழ்நாடு அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். அவரது கருத்துகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண் குமார் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு, மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுள்ளதாகக் கூறி அதைக் கண்டித்து நாம் தமிழர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். சீமான் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நாதக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சீமான்: இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கு திமுக அரசே காரணம் எனச் சாடினார். மேலும், கூட்டணி அரசியல் குறித்தும் பேசிய அவர், போலீசாரையும் விமர்சிக்கும் வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சுகள் சர்ச்சையைக் கிளப்பினர்.
சர்ச்சை: அந்த போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் சீமான், நான் யாரிடம் பேசுகிறேன் என்பதை நோட்டமிட்டு வெளியிடுவது தான் ஐபிஎஸ் படித்தவர்களுக்கு வேலையா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், சில மோசமான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார். மேலும், கட்சிக்குள் ஒருவரை பிசுறு என்போம்.. பின்னர், அவரையே உசுரு என்போம். இதில் உனக்கு என்ன வந்தது என்றும் அவர் ஒருமையில் பேசியிருந்தார்.
சீமானின் இந்தப் பேச்சுகள் இணையத்தில் டிரெண்டானது. பலரும் அவரது பேச்சை விமர்சித்து வந்தனர். இதற்கிடையே திருச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வருண் குமார் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மேலும், சீமானின் இது போன்ற தரக்குறைவான பேச்சுகளைத் தமிழக மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "தமிழ்நாட்டு மக்கள் இதுபோன்ற பேச்சுகளைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவரது பொய்யான கருத்துகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.
ஜனநாயகம் மற்றும் நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பொது மேடையில் இதுபோன்ற கொச்சையான பொய்களைப் பேசினால் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications