தமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் கொரோனா பரவலின் வேகம் மிக மோசமாக உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஜெயராம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களுக்குச் சாரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வனிதா ஐபிஎஸ்: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்குப் பாண்டியன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களுக்குத் தினகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வாரியன ஐபிஎஸ் அதிகாரிகள்
திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, மாவட்டங்களுக்கு சஞ்சய் குமார் ஐபிஎஸ்: திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களுக்கு அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு லோகநாதன் ஐபிஎஸ்; மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களுக்கு ஷைலேஷ்குமார் ஐபிஎஸ்; நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு முருகன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,
பணிகள் என்ன
தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்கள் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தீவிர கொரோனா பாதிப்பு உடையவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைகள், போக்குவரத்து போன்ற பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
கொரோனா பரவல் அதிகம் பரவ வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். நிலைமைக்கு ஏற்ற வகையில் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் வசதி போதுமான அளவு இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு 50% இருக்கைகளை ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.