1 சென்ட் நிலம் இவ்வளவா? சென்னையின் புறநகரங்களில் நிலத்தை அள்ளும் கார்ப்பரேட்கள்.. தலை சுற்றுதே
சென்னை: சென்னையின் எல்லைகள் நாளுக்கு நாள் கண்முன்னே விரிவடைந்து கொண்டே செல்கின்றன.. ஒரு காலத்தில் காடுகளாக இருந்த பகுதிகள் இன்று கோடிகளின் மையமாக மாறி வருகின்றன.. வண்டலூரைத் தாண்டி கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு வரை நில விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன.. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னால் இருக்கும் உண்மையான காரணங்கள் என்ன என்பதை பற்றி ரியல் எஸ்டேட் துறையின் நிபுணர் ஹென்றி பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இதுகுறித்து அவர் சொல்லும்போது, "சென்னை மாநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்லும் நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் வண்டலூரைத் தாண்டி கிளாம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு நோக்கியே திரும்பியுள்ளது.

ஒரு காலத்தில் வெறும் காடுகளாகவும், ஒதுக்குப்புறமான இடங்களாகவும் பார்க்கப்பட்ட ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் பொத்தேரி போன்ற பகுதிகள் இன்று சென்னையின் 'இரண்டாம் தலைநகரம்' என்று சொல்லும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளன.
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம்
இந்த அதிரடி மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது அங்குள்ள போக்குவரத்து வசதிகளும், உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் வருகையும்தான்.. குறிப்பாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது..
வண்டலூர் உயிரியல் பூங்கா வரை சிஎம்டிஏ (CMDA) அங்கீகாரம் பெற்ற நிலங்கள் அதிகம் உள்ள நிலையில், அதைக் கடந்தவுடன் டிடிசிபி (DTCP) அங்கீகாரம் பெற்ற மனைகளே அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.. நிலத்தின் விலையைப் பொறுத்தவரை சாதாரண மனிதர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தை எட்டியுள்ளது.
1 சென்ட் ரூ.50 லட்சம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே ஒரு சென்ட் நிலத்தின் விலை 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் 50 முதல் 60 கோடி ரூபாயைத் தொடுகிறது.. இது ஒரு சராசரி நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு எட்டாக்கனியாகத் தெரிந்தாலும், முதலீட்டாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தப் பகுதியைத் தங்கச் சுரங்கமாகவே பார்க்கின்றன..
பிரதான சாலையில் உள்ள வணிக ரீதியிலான இடங்கள், அதாவது கடைகள் அல்லது அலுவலகங்கள் கட்டுவதற்கான இடங்களின் விலை ஒரு கிரவுண்ட் 3 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு சாலை
குறிப்பாக ஜோகோ (Zoho) போன்ற உலகப்புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் எஸ்ஆர்எம் (SRM) போன்ற பிரம்மாண்டமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பொத்தேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை எகிறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு இவ்வளவு உயர்வதற்கு அங்குள்ள அடிப்படை வசதிகளே முக்கியக் காரணம்.. ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டது, மெட்ரோ ரயில் திட்டத்தின் நீட்டிப்பு மற்றும் 200 அடி, 400 அடி வெளிவட்டச் சாலைகளின் இணைப்பு ஆகியவை இந்தப் பகுதியைச் சென்னையின் பிற பகுதிகளுடன் மிக எளிதாக இணைக்கின்றன..
சிப்காட், சிட்கோ
மேலும் வேலம்மாள் போன்ற முன்னணி சர்வதேசப் பள்ளிகள், நட்சத்திர ஹோட்டல்கள், பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்தும் இப்போது கிளாம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு சாலைகளிலேயே வந்துவிட்டன..
இதுமட்டுமின்றி சிப்காட் (SIPCOT) மற்றும் சிட்கோ (SIDCO) போன்ற தொழிற்பேட்டைகள் அருகிலேயே இருப்பதால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.. இதனால் மக்கள் சென்னையின் நெரிசலான பகுதிகளுக்குள் இருப்பதை விட, சகல வசதிகளும் கொண்ட இத்தகைய புறநகர்ப் பகுதிகளில் குடியேறவே அதிகம் விரும்புகின்றனர்.
5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மக்கள் குடியிருப்புகள் மிக அடர்த்தியாக வளர்ந்து வருவதால், இப்பகுதி சென்னையின் ஒரு துணைக்கோள் நகரமாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் உருவெடுத்துள்ளது.. செங்கல்பட்டு செல்லும் ஜிஎஸ்டி சாலையில் நிலம் வைத்திருப்பவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக மாறியிருப்பதற்குப் பின்னால் இத்தகைய பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வளர்ச்சிகளே ஒளிந்துள்ளன.
தாம்பரம் விரிவாக்கம்
தாம்பரம் மாநகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), தற்போது 1,194 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.. இதனை விரிவாக்கம் செய்ய 2018-ஆம் ஆண்டிலேயே அரசாணை வெளியிடப்பட்டது.. அதன் தொடர்ச்சியாக, 2023-இல் திருத்தி அமைக்கப்பட்ட திட்டத்தின்படி, இதன் எல்லைகள் 5,904 சதுர கிலோமீட்டராக, அதாவது சுமார் ஐந்து மடங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது..
குறிப்பாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதால், இந்தப் பகுதிகளில் மக்கள் குடியேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.." என்றெல்லாம் துல்லியமாக தெரிவித்துள்ளார் டாக்டர் ஹென்றி.












Click it and Unblock the Notifications