500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா
சென்னை: டிஜிட்டல் இந்தியா, ஆன்லைன் பேமெண்ட் என்று நாம் எவ்வளவுதான் போனில் ஸ்கேன் செய்து பணம் அனுப்பினாலும் கையில் கடகடவென காசை வாங்கிப் பாக்கெட்டில் வைப்பதில் இருக்கும் சுகமே தனி தான். 2016ல் நடந்த அதிரடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதுசு புதுசாக வந்த ரூ.10 முதல் ரூ.500 நோட்டுகள் வரை எல்லாவற்றையும் நாம் பார்த்துவிட்டோம். இந்தச் சூழலில் தான், கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாக்களில் ஒரு செம பரபரப்பான செய்தி தீயாய் பரவி, ஒட்டுமொத்த பொதுமக்களையும் "என்னப்பா சொல்றீங்க?" என்று ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்திருக்கிறது.
நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் 500 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிதாக 700 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்போகிறதாம்! எக்ஸ் தளத்தில் ஒருவர் அந்த 700 ரூபாய் நோட்டின் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

அச்சு அசல் இந்திய நோட்டு
அந்த நோட்டை உற்றுப் பார்த்தால், முன்பக்கத்தில் மகாத்மா காந்தி படம், அசோகச் சக்கரம், இந்திய வரைபடம் எல்லாம் பக்காவாக இருக்கிறது. ஆனால் அத்துடன் சேர்த்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது தான் செம காமெடி. இதே நோட்டின் பின்புறத்தில் கர்நாடகாவின் மைசூரு அருகே இருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலின் படம் இடம்பெற்றுள்ள இன்னொரு போட்டோவும் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த மக்கள் பலரும் குழம்பி விட்டார்கள்.. ஒருவேளை நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்த ஆர்பிஐ நிஜமாகவே இப்படி ஒரு நோட்டைக் கொண்டு வருகிறதோ? இது எப்போது ஏடிஎம்மில் கிடைக்கும்? என்று ஆவலோடு தேடத் தொடங்கிவிட்டனர். ஆனால், இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையை நிதித்துறை வல்லுநர்களும், உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்களும் உடைத்துள்ளனர்.
700 ரூபாய் நோட்டு செய்தி
இந்த 700 ரூபாய் நோட்டு செய்தி முற்றிலும் ஒரு அப்பட்டமான வதந்தி என்றும், யாரோ செய்த விஷமத்தனமான எடிட்டிங் வேலை தான் இப்படியொரு போட்டோ இணையத்தில் வட்டமடிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.. 700 ரூபாய் போன்ற ஒரு நோட்டை அறிமுகம் செய்தால் சில்லறைத் தட்டுப்பாடு தான் அதிகமாகும் என்பதால், அப்படி எந்தவொரு திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்றும் திட்டவட்டமாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் நெருப்பு இல்லாமல் புகையுமா? இந்த 700 ரூபாய் நோட்டு வதந்திக்குக் பின்னால் ஒரு சுவாரசியமான நிஜக் கதையும் ஒளிந்திருக்கிறது.
இந்தியாவில் காகிதப் பணத்திற்கான தேவை அதிகமாக இருப்பதால், ரூபாய் நோட்டுகளின் ஆயுளைக் கூட்டவும், தயாரிப்பு செலவைக் குறைக்கவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அதாவது பாலிமர் கரன்சியை கொண்டு வர ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மீண்டும் வருமா இந்த திட்டம்
உண்மையில் இந்தத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முதன்முதலில் கடந்த 2012-லேயே கையில் எடுத்தது. ஆனால் சில காரணங்களால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, காகித நோட்டை விட 3 மடங்கு அதிக காலம் உழைக்கும் இந்த பிளாஸ்டிக் நோட்டுத் திட்டம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, நெதர்லாந்து போன்ற பல நாடுகளில் இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் தான் சூப்பராகப் புழக்கத்தில் உள்ளன. இந்தியாவிலும் இது எப்போது வரும் என்ற அதிகாரப்பூர்வ தேதி இன்னும் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications