விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில்
சென்னை: திரைத்துறையில் இருந்து வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல்வராகி உள்ளார். ஜெயலலிதாவை போல் போயஸ் கார்டனில் விஜய் விரைவில் குடியேறலாம் என்று கூறப்படும் நிலையில் அங்கு இருக்கும் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு அவரது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா சொன்ன பதில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்தார். தற்போது முதல்வராகி உள்ள விஜய்யும் விரைவில் போயஸ் கார்டனில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவுக்கும் மேலாக காரில் கடந்து தலைமை செயலகம் வந்து செல்கிறார்.

இதனால் விஜய் தலைமை செயலகத்துக்கு எளிதில் சென்று வருவதற்கு வசதியாக போயஸ் கார்டனில் வசிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் போயஸ் கார்டன் கவனம் பெற்றுள்ளது.
இந்த போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் சொகுசு பங்களா கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் தான் சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பங்கேற்று பேசினார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம், ''இந்த போயஸ் கார்டனுக்கும், அரசியலுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. சென்னையில் ஒரு பவர்புல்லான இடமாக போயஸ் கார்டன் உள்ளது. உங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வருவார்களா? தனுஷ் வருவாரா?'' என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு கஸ்தூரி ராஜா, ''சென்னையில் பவர்புல்லான இடம் கோபாலபுரம் தான். கருணாநிதி அங்கு தான் வாழ்ந்தார். ஒளி பிறந்த இடம் அது. போயஸ் கார்டனுக்கு இளையதளபதியும் (விஜய்) வந்துவிட்டார் போல் இருக்கிறதே. வரட்டும் வரட்டும். ஆனால் அரசியல் நமக்கு வேண்டாம். என் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்வதற்கு நான் யார்? வரமாட்டார்கள் என்று கணிப்பதற்கு நாம் யார்?.
வரலாம். நான் வர முடியாது. எனக்கு வயது போய்விட்டது. என் மகன்கள் வரலாம். என் பேரன்கள் வரலாம்'' என்றார். இதையடுத்து ''தனுஷ் வருவார்களா?'' என மீண்டும் கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு, கஸ்தூரி ராஜா,''அதை நான் சொல்ல முடியாது'' என்றார்.
அதேவேளையில் தனது குடும்பத்தில் இருந்து மகன்கள், பேரன்கள் அரசியலுக்கு வரலாம் என்று கூறியுள்ளாரே தவிர தனது குடும்பத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். ஒருவேளை வந்தால் நான் தடுப்பேன் என்று அவர் கூறவில்லை. இதனால் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications