கார்த்தி போல் மன்னிப்பு கேட்ட நடிகர் சூர்யா? லட்டு சர்ச்சையில் பரவும் ஸ்கிரீன்ஷாட்.. உண்மை என்ன?
சென்னை: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான கேள்விக்கு சிரித்தபடி கிண்டல் செய்யும் தொனியில் பேசிய குற்றச்சாட்டில் நடிகர் கார்த்தி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார். இதையடுத்து நடிகர் கார்த்தியை தொடர்ந்து அவரது அண்ணன் சூர்யாவுடம் வருத்தம் தெரிவித்து 3 நாள் விரதம் செய்ய உள்ளதாக பவன் கல்யாணிடம் தெரிவித்ததாக தகவல் பரவி வரும் நிலையில் அது உண்மையா? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது லட்டு தயாரிப்பு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லட்டில் விலங்குகள் கொழுப்புகள் கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். மேலும் ஆய்வக அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில் திருப்பதி கோவில் லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயாபீன், மீன் எண்ணெய் உள்ளிட்டவற்றில் எதுவும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இது தற்போத சர்ச்சையாகி உள்ளது.
இதற்கிடையே தான் வரும் 27 ம் தேதி வெளியாக உள்ள நடிகர் கார்த்திக்கின் ‛மெய்யழகன்' திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் லட்டு சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛நாம் இப்போது லட்டு பற்றி எதுவும் பேச வேண்டாம். இது சென்சிட்டிவ்வான டாபிக். இதனை பேச விரும்பவில்லை. லட்டு இப்போது வேண்டாம்.'' எனக்கூறி சிரித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு விஷயத்தை கிண்டல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனை நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கடுமையாக கண்டித்தார். அவர் கூறுகையில், ‛‛லட்டு பற்றி சிலர் காமெடி செய்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகளில் இதனை நான் பார்த்துள்ளேன். லட்டு சென்சிட்டிவ் விஷயம் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். அதனை ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து விஷயங்களிலும் கருத்து சொல்வதை நிறுத்த வேண்டும். இதற்க கூட பதில் உங்களுக்கு தைரியம் இல்லையா?'' என கேள்வி எழுப்பி கடும் அதிருப்தியை வெளிக்காட்டி இருந்தார்.

இதையடுத்து துணை முதல்வர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டியர் பவன் கல்யாண், உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எதிர்பாராத வகையில் நடந்த தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தன் என்ற முறையில் எப்போதும் நான் நமம் மரபுகளை மதித்து நடக்கிறேன்'' என கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது வலைதளங்களில் இன்னொரு தகவல் பரவி வருகிறது.
நடிகர் கார்த்தி போலவே அவரது அண்ணன் சூர்யாவும், பவன் கல்யாணிடம் வருத்தம் தெரிவித்துள்ளதாக அந்த தகவல் பரவுகிறது. அதாவது நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்ட அந்த பதிவில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛சமீபத்தில் நடந்த ஆடியோ விழாவில் எனது சகோதரர் கார்த்தி லட்டு பற்றி கூறிய கருத்துக்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். என் சகோதரரின் வார்த்தைக்காக நானும் 3 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன் பவன் கல்யாண் காரு'' என கூறியுள்ளதாக ஸ்கிரீன்ஷாட் பரவி வருகிறது.
இதுபற்றி நடிகர் சூர்யாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று பார்த்தபோது அவர் தரப்பில் அப்படி எந்த பதிவும் வரவில்லை. இதையடுத்து சூர்யாவின் அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் வலைதளத்தில் பரவும் ஸ்கிரின்ஷாட் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தபோது தான் நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருப்பதாக கூறிய தகவல் போலியானது என்பது தெரியவந்தது. அதாவது நடிகர் சூர்யாவின் உண்மையான எக்ஸ் பக்கம் ‛‛Suriya Sivakumar'' என்ற பெயரில் @Suriya_Offl என உள்ளது. இதில் சூர்யா வருத்தம் தெரிவித்து எந்த பதிவையும் வெளியிடவில்லை.
ஆனால் தற்போது நடிகர் சூர்யாவின் பெயரில் வருத்தம் கோரி வெளியான பதிவுடன் கூடிய ஸ்கிரின்ஷாட்டில் இருக்கும் ஐடியின் பெயர் என்பது Suriya Shivakumar @ Suriya Offt என உள்ளது. அதாவது சூர்யாவின் பெயருக்கு பின்னால் இருக்கும் அவரது தந்தை சிவக்குமாரின் பெயரில் எச் கூடுதலாக உள்ளது. அதேபோல் Suriya Offl என்பதற்கு பதில் Suriya Offt என மாறி இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யா பற்றி வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications