சீக்ரெட் மீட்.. பிரஷாந்த் கிஷோரை சந்திக்கும் விஜய்.. அரசியல் பற்றி முக்கிய முடிவு? மாஸ்டர் பிளானாமே!
சென்னை: நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜய்யின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது.
மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதாவது மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர்.

இதில் மாவட்ட கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி எதிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிபெறவில்லை. மற்றபடி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் வென்றனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் புதிய சாதனை படைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால் இவர்கள் பெரிய கட்சி பின்னணியை கொண்டவர்கள் கிடையாது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். உள்ளூர் அளவில் பிரபலமான நபர்களாக இருப்பதால்தான் இவர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்து இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு இது ஒரு வகையில் நல்ல சிக்னலாக பார்க்கப்படுகிறது. எப்படி தேமுதிகவை தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் ஆழம் பார்த்தாரோ அதேபோல்தான் தற்போது விஜய் ஆழம் பார்த்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77 பதவிகளை பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சியை விட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் வென்று உள்ளனர். நாம் தமிழர் கட்சி எந்த விதமான மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் நாம் தமிழர் எந்த இடத்திலும் வெல்லவில்லை. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழரை விட இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டது.
விஜய் அரசியல்: இந்த நிலையில்தான் விஜய் அரசியலுக்கு வருவதற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1.500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.
இதற்காக சென்னையில் தனியார் மகால் ஒன்றில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தினார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த கல்வி நிதி வழங்கும் விழா நடந்தது. இதில் பேசிய அவர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்பது போல உள்ளது.

படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற வசனம் கவர்ந்தது. படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை, என்று கூறினார். இந்த நிகழ்வில் அவர் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
எல்லோரும் பேசியதை கேட்டுக்கொண்டு அவர்களுக்கு பதில் அளித்தார். அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். 2 மணி நேரம் அவர் தொடர்ச்சியாக நின்றபடி இருந்தார். ஆனால் பெரிதாக அதை காட்டிக்கொள்ளவில்லை. யார் மீதும் கோபம் அடையவில்லை.
அதேபோல் இடை இடையே சிறிய 2-3 நிமிட பிரேக் எடுத்தால் கூட சாப்பிட கூட போகாமல் 12 மணி நேரம் அப்படியே நின்றபடி அவர் எல்லோரிடமும் பரிசுகளை கொடுத்து போட்டோ எடுத்தார். அவரின் இந்த செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அவ்வளவு நேரம் நின்றும் கூட அவர் முகத்தில் கோபத்தையோ, வருத்தத்தையோ காட்டாதது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அரசியல்: இந்த மீட்டிங்கே விஜய்யின் அரசியல் திட்டத்தை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்ட மீட்டிங் என்று கூறப்பட்டது. தனது ரசிகர்களை தொண்டர்கள் கூட்டமாக மாற்ற, ரசிகர் மன்றத்தை அப்படியே கட்சியாக மாற்ற வேண்டும் என்று விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இனி அடிக்கடி ரசிகர்களை விஜய் சந்திப்பார், அவர்களுடன் ஆலோசனை செய்வார், மாவட்ட அளவில் பூத் கமிட்டியை அமைப்பார் என்றும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. விரைவில் அவர் அரசியலில் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, பூத் கமிட்டியை அமைப்பது, லோக்சபா தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக ஆலோசனைகளை செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சீக்ரெட் மீட்டிங் விரைவில் இவர்களுக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications