உடைகிறதா அதிமுக? கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிஞ்சிடும்.. சிவி சண்முகம் பேட்டி
சென்னை: அதிமுக சட்டமன்ற குழு தலைவர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் அதே வேளையில், காலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 பேர் கடிதம் அளித்திருந்தனர். தற்போது, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று சிவி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிந்துவிடும் என பதில் அளித்தார்.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது அந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த கட்சி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும். பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருந்தும் அதனை அதிமுக சரியாக பயன்படுத்தி கொள்ளாததே, இந்த தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்த நிலையில் எடப்பாடிக்கு எதிராக 36 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏக்கள் தனியாக 3 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏனென்றால் 3-இல் 2 பங்கு பிரிந்து சென்றால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்பதால் இந்த முடிவை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் எடுத்துள்ளதாக கூறப்பட்டது.
இதனால் அதிமுக பிளவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இன்று காலையில் சட்டசபை கூடிய போது எடப்பாடி தலைமையில் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களும், வேலுமணி தரப்பில் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களும் வருகை தந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடியை ஆதரித்து கடிதம் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் மாலையில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 34 எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தனர். அப்போது அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி வேலுமணியை சிவி சண்முகம் தரப்பு முன்மொழிந்தது கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதிமுக உடைகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிவி சண்முகம், "இவ்வளவு நாள் அமைதியாக இருந்தீங்கள்ளா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிஞ்சிடும்.. நாங்களே எல்லாத்தையும் கூறுகிறோம்" என கூறிவிட்டு சென்றனர். தற்போதைய நிலவரப்படி எடப்பாடி தலைமையில் 17 எம்.எல்.ஏக்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 30 எம்.எல்.ஏக்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த குழப்பங்களால், தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.














Click it and Unblock the Notifications