காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா அப்சரா ரெட்டி...? அழைப்புவிடுக்கும் முக்கியக் கட்சிகள்
சென்னை: மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் அப்சரா ரெட்டிக்கு தமிழகத்தின் முக்கிய இருபெரும் கட்சிகளில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை மீது அப்சரா ரெட்டி மனவருத்தத்தில் உள்ள நிலையில், அவரை தங்கள் கட்சியில் இணைக்க திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே இது தொடர்பாக அப்சரா தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை.

ஜெயலலிதா ரசிகை
அப்சரா ரெட்டியை பொறுத்தவரை ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் அரசியலில் இருந்து ஒதுங்கி சமூகப் பணிகளில் மட்டும் அக்கறை செலுத்தி வந்தார். இதனிடையே மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் எம்.பி.யின் அறிமுகத்தால் அவர் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாக அழைத்து வரப்பட்டு தற்போது மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளராக உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையிடம் சீட் எதிர்பார்த்தார். திருநங்கை ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய பெருமை காங்கிரஸ் கட்சியை சாரும் என அப்சரா ரெட்டிக்காக பலரும் சிபாரிசு செய்தனர். ஆனால் கட்சிக்கு வந்தவுடன் ஒருவருக்கு சீட் கொடுத்தால் அது ஏற்கனவே உள்ள நிர்வாகிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என அஞ்சி கே.எஸ்.அழகிரி அப்சரா ரெட்டிக்கு சீட் கொடுக்கவில்லை.

அகில இந்திய அளவில்
தமிழகத்தில் சீட் கிடைக்காத நிலையில் மனம் தளராமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு கேரளா, கர்நாடகா, என பல மாநிலங்களில் பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் தமிழகத்தை தாண்டி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பரிச்சயம் ஆகத் தொடங்கினார். மற்ற மாநிலங்களில் தனக்கு கிடைக்கும் அங்கீகாரம் தமிழக காங்கிரஸில் கிடைக்கவில்லை என்பது தான் அவரது மன வருத்தத்திற்கு முக்கியக் காரணம். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் அப்சரா போன்றவர்கள் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்பார்கள் எனக் கருதிய திமுகவும், அதிமுகவும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

நம்பிக்கை
ஆனால், இதற்கு அப்சரா ரெட்டி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லையாம். இது தொடர்பாக விசாரித்த போது, காங்கிரஸ் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அப்சரா ரெட்டி களப்பணியை தொடங்கிவிட்டதாகவும், இதற்காக அவர் திருவள்ளூர், சென்னை ஆகிய இரண்டு மாவட்டங்களில் 2 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications