ஆட்டம் கண்ட அதிமுக.. சொல்லி அடிக்கும் பாஜக! ரத்தத்தின் ரத்தங்களை அதிர வைத்த எக்ஸிட் போல் முடிவுகள்!
சென்னை: பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள், தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக அதிக இடங்களில் வெல்லக்கூடும் எனத் தெரிவிக்கின்றன. பாஜக தமிழ்நாட்டில் அதிமுகவை ஓவர் டேக் செய்யுமா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.
தமிழகத்தை பொறுத்தவரை முன்னணி ஊடகங்கள் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தி.மு.க கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்றே தெரிவிக்கின்றன. திமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றுவது பாஜக கூட்டணி என்கின்றன பெரும்பாலான கணிப்புகள்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேசிய அளவில் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள். இந்தியா கூட்டணி 130+ இடங்களிலும், மற்ற கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெறக்கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி என களத்தில் 4 முனை போட்டி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக கூட்டணி 35 க்கும் அதிகமான இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போகலாம் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னணி ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் சொல்வது:
சிஎன்என் - நியூஸ் 18:
திமுக கூட்டணி: 36 - 39
அதிமுக கூட்டணி: 0 - 2
பாஜக கூட்டணி 1- 3
இந்தியா டுடே:
திமுக கூட்டணி 26 - 30
அதிமுக கூட்டணி 6 -8
பாஜக கூட்டணி 1 - 3
ஜன் கி பாத்:
திமுக கூட்டணி 34 - 38
அதிமுக கூட்டணி - 1
பாஜக 0 - 5
ஏபிபி சி-வோட்டர்:
திமுக கூட்டணி 37 - 39
அதிமுக கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 0 - 2
ரிபப்ளிக் - மேட்ரைஸ்:
திமுக கூட்டணி 37
அதிமுக கூட்டணி 1
பாஜக கூட்டணி - 1
ரிபப்ளிக் - பி மார்க்:
திமுக கூட்டணி 38
அதிமுக கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 0 - 2
டிவி 9:
திமுக கூட்டணி 35
அதிமுக கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 4
பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், இந்த தேர்தலில் அதிமுக மிகக் குறைவான சீட்களையே வெல்லக்கூடும் என கணித்துள்ளன. குறிப்பாக, பாஜகவை விட குறைவான சீட்களே அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேனியில் அதிமுகவின் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. இந்தச் சூழலில், பாஜக கூட்டணியை விட அதிமுக பின்னடைவைச் சந்திக்கும் என்கிறது எக்ஸிட் போல் ரிசல்ட்.
கடந்த முறை அதிமுக சார்பில் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்ற தேனியில் இந்த முறை திமுக 35 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. அதிமுக பின்னடைவைச் சந்தித்துள்ளது. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவை பெற்று, சுயேச்சை வேட்பாளராக பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் களமிறங்கியுள்ளார். தந்தி தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, திமுக கூட்டணி வேட்பாளர் இந்தியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனியிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ் தோல்வியடைவார், அதிமுக 3ஆம் இடம் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாணிக்கம் தாகூா் 36 சதவீதம்,தேமுதிகவின் விஜய பிரபாகரன் 32சதவீதம், பாஜக சார்பாக ராதிகா சரத்குமாருக்கு 21 சதவீதமும் ஓட்டுகள் கிடைக்கும் என்று தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, எக்ஸிட் போல் முடிவுகள் அதிமுகவுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவை விட்டு விலகி தனி கூட்டணி அமைத்த நிலையில், அதிமுக பின்னடைவைச் சந்தித்தது பாஜகவின் வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. எக்ஸிட் போல் முடிவுகளால் பாஜகவினர் இப்போதே உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications