கேட்ட சீட் கிடைக்கலை.. எதிர்பார்த்த எதுவும் நடக்கலை.. அதிமுகவை குறி வைக்கிறதா பாஜக
அதிமுகவுக்கு பாஜக குறி வைப்பதாக கூறப்படுகிறது
சென்னை: கூட்டணியில் இருக்கிறது என்றுதான் பெயர்.. ஆனாலும் அதிமுக மீது ஒரு கண் பாஜகவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் அதிமுக அரசு செய்யும் தவறு, குறைகளை வெளிச்சம் போட்டு காட்ட மாநில ஐடி பிரிவுக்கு பாஜக தலைமை அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி வைத்ததில் இருந்தே அதிக நெருக்கம் காட்டாமல் இருந்தது அதிமுகவும் - பாஜகவும்! தேர்தல் தோல்விக்கு பிறகு இது இன்னும் குறைந்துவிட்டது.
இப்போது நடக்க போகும் இடைத்தேர்தலில் சீட் கேட்டும் அதுவும் இல்லாமல் போய்விடவும், பாஜக தரப்பு செம டென்ஷனாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
கனிமொழிக்கு திஹார்.. லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை.. மிரள வைத்த ஷைனி.. ஓய்வு பெற்றார்!
ஐடி பிரிவு
இதனால்தானோ என்னவோ அதிமுகவை குறி வைக்க தொடங்கி உள்ளது பாஜக! அதற்காக அதிமுக அரசின் தவறான செயல்களை அம்பலப்படுத்தவும், அதன் மீதான குறைபாடுகளை முன்னிலைப்படுத்தவும் தமிழக பிரிவு தனது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட்டு உள்ளதாம்.
பேனர் விவகாரம்
அதன்படியே ஆகட்டும் என்று ஐடி விங்கும் அதிமுகவை ரவுண்டு கட்ட தொடங்கி உள்ளது. சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இருந்தே பாஜக ஐடி பிரிவு அதிமுகவை சரமாரியாக தாக்கி வருவதாக கூறப்படுகிறது. கட்-அவுட் கலாச்சாரத்துக்கு எதிரான கேள்வியை முன்வைத்து, பல விவகாரங்களில் அதிமுகவை விமர்சித்து வருகிறது இந்த ஐடி விங்!
ஒப்புதல்?
கடந்த இந்த 10 நாட்களில் மட்டும் பாஜக மாநில பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிமுக அரசாங்கத்தின் மோசடிகள், முறைகேடுகள் எடுத்துக் காட்டப்பட்டு வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இதற்கான ஒப்புதலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் உள்ளிட்டோர் அளித்துள்ளதாக தெரிகிறது.
விமர்சனங்கள்
"நாங்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் தவறான செயல்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல், ஊழலை சரிபார்க்க லோக் ஆயுக்தாவை பயன்படுத்த மக்களுக்கு எடுத்து கூறி வருகிறோம் " என்று ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மணல் மாஃபியா உட்பட மதுரை மாவட்டத்தின் கவினிபட்டி கிராமத்தில் சாலைப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்தது வரை கேள்விகளுடன் ட்வீட் போட்டு தாக்கி வருகிறது.
மலருமா தாமரை?
முன்பெல்லாம், அதிமுக பற்றி விமர்சிக்க கூடாது என்று ஒரு உத்தரவு இருந்த நிலையில், இப்போது பகிரங்கமாகவே விமர்சித்து கேள்வி எழுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், தாமரையை மலர வைக்க பாஜகவின் பல வழிகளில் இதுவும் ஒன்று போலும்!