சென்னையை நோக்கி அடுத்த புயல் வருது? வானிலையில் உண்மையில் நடப்பது என்ன? வல்லுனர்கள் விளக்கம்
சென்னை: சென்னையில் விரைவில் இன்னொரு புயல் தாக்க போவதாக செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு இது தொடர்பான விளக்கத்தை கொடுத்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த திங்கள் கிழமை தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

புயல் இல்லை: இந்த நிலையில்தான் சென்னையை நோக்கி அடுத்த புயல் வருவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. அடுத்த வாரம் இந்த புயல் தாக்கும் என்று செய்திகள் வருகின்றன. சென்னை புயல் தொடர்பாக சொல்லப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு இது தொடர்பான விளக்கத்தை கொடுத்துள்ளது.
மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையைப் பாதிக்கக்கூடிய சூறாவளி மீண்டும் வரப்போவதாக எங்களுக்கு மெசேஜ் அனுப்பி கேட்கிறீர்கள். ஆனால் அப்படி உடனடியாக சென்னைக்கு புயல் அச்சுறுத்தல் இல்லை. ஐஎம்டியின் விரிவாக்கப்பட்ட சோதனையும், கணிப்பும் அதை உறுதிப்படுத்துகிறது.
இதனால் சென்னைக்கு இப்போதைக்கு புதிய புயல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு மழை பெய்யுமா என்று பார்த்தால், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் தாக்கம் மற்றும் கிழக்கு அட்சரேகையில் ஏற்பட்டு உள்ள காற்று ஆகியவை காரணமாக பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இன்றும் நாளையும் 50:50 என்ற விகிதத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றின் ஒருங்கிணைப்பு காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. படிப்படியாக வறண்ட வானிலை பின்னர் ஏற்படும். ஆனால் புயலுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது.
வெதர்மேன் அறிவிப்பு: சென்னையை நோக்கி அடுத்த புயல் வருவதாக சொல்லப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் வதந்தி அடிப்படையற்றது; அதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் அரபிக் கடல் பகுதியில் காற்றத்தழுத்த தாழ்வுநிலை 10ம் தேதி உருவாகி இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம்; ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு மழை: சென்னையை டிசம்பர் 4, 5 ஆம் தேதிகளில் பெய்த மழையால் சென்னையே தத்தளித்து வருகிறது. இரு தினங்களையும் சேர்த்து 638 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த புள்ளி விவர பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மழையை அப்படியே மீண்டும் நினைவுபடுத்திவிட்டது இந்த ஆண்டு பெய்த பேய்மழை. சென்னை நுங்கம்பாக்கத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி 230 மி.மீட்டர் மழையும் 5 ஆம் தேதி மழையும் 238 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. சென்னையில் பெய்த இந்த பெருமழையே சென்னையை வெள்ளக்காடாக்க காரணமாகிவிட்டது, என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications