பெரிய மூவ்! டெல்லிக்கு பறக்கும் திமுக தலைகள்! எதிர்பார்த்தபடியே நடக்குதே! எல்லாம் சரியா போனா.. சுபம்
சென்னை: குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வாகி உள்ள நிலையில் திமுகவின் முக்கியமான தலைவர்கள் சிலர் விரைவில் டெல்லிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வென்றார். தமிழ்நாட்டில் இவரை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.
ஆனால் திமுக திரௌபதி முர்முவை ஆதரிக்கவில்லை. மாறாக காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மூலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்காவை ஆதரித்தனர்.
கடைசியில் முர்மு வெற்றிபெற்றுள்ளார்.

முக்கியத்துவம்
முர்மு குடியரசுத் தலைவர் ஆன நிலையில் பல்வேறு விஷயங்களுக்காக இவர் முக்கியத்துவம் பெறுகிறார். முக்கியமாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பிய பின் முர்முதான் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதில் முர்மு முடிவே இறுதியானது. தமிழ்நாடு திமுக அரசின் முக்கியமான வாக்குறுதி நீட் விலக்கு ஆகும். இந்த சட்டத்திற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை.

ஒப்புதல்
இந்த வருட தொடக்கத்தில் நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு இதே மசோதாவை தாக்கல் செய்தது. நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறையாக கேபினெட்டின் ஒப்புதலைப் பெற்று பேரவையிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே பொருள் குறித்த மசோதாவை இரண்டாவது முறையாகவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டால் அதனை ஆளூநர் நிராகரிக்க முடியாது.

அனுப்ப வேண்டும்
குடியரசு தலைவருக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டம். அப்படியிருந்தும் அவர் அனுப்பி வைக்காமல் கிடப்பிலேயே வைத்திருந்தார். அதன்பின் நீண்ட மாதங்களாக கிடப்பில் போட்டுவைத்திருந்த மசோதாவை ஆளுநர் திடீரென்று டெல்லி அனுப்பினார். நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தன்னிடம் கவர்னரின் செயலாளர் தெரிவித்ததாக சட்டப்பேரவையில் கடந்த 4.5.2022ம் தேதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்பின் இது மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டது.

சோதனை
மத்திய உள்துறை இந்த சட்டத்தின் ஷரத்துகளை வாசிக்கும். அதன்பின் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கும். இதற்கு 3 மாதங்கள் கூட எடுக்கலாம். ஆனால் அதற்குள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத்தை அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து பேச திமுக எம்பிக்கள், மூத்த தலைவர்கள் விரைவில் குடியரசுத் தலைவரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

எதிர்பார்ப்பு
முர்மு குடியரசுத் தலைவர் ஆன நிலையில் திமுக எம்பிக்கள் அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் திட்டத்தில் உள்ளனர். அப்போது எதிர்பார்த்தபடியே நீட் தேர்வு பற்றியும் பேச உள்ளனர். முக்கியமாக கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பிக்கள் திரௌபதி முர்முவை சந்தித்து கோரிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு சுமுகமாக செல்லும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு கிடைக்கும் . ஆனால் குடியரசுத் தலைவர் முர்மு என்ன முடிவு எடுப்பார் என்பது புதிராக உள்ளது.











Click it and Unblock the Notifications