"நெளியும்" அதிமுக.. அங்கே ஆளுநருக்கு செக்.. இங்கே அவசரமாக எடப்பாடி மீட்டிங்.. சட்டப்பேரவையில் புயல்
சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கவர்னர் திருப்பி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். இதற்காகவே, ஒரு சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி, இந்த மசோதாக்களை எல்லாம், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானம்: அதன்படியே, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் துவங்கி உள்ளது. அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சபை கூடியதுமே, உயிரிழந்த உறுப்பினர்கள், மூத்த தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது 2 நிமிடங்கள் அவையில் உள்ளவர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடக்கும்போது, எடப்பாடியின் இந்த அவசர ஆலோசனை கூட்டம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நெருடல்: ஆளுநருக்கு எதிராக உள்ளதால், இன்றைய சிறப்பு சட்டப்பேரவை கூட்டமானது, எதிர்க்கட்சிகளுக்கு நெருடலை தந்து வருகிறது.. அந்தவகையில், இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா? அப்படி பங்கேற்கும் பட்சத்தில், ஆளுநர் விவகாரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள போகிறது? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
காரணம், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, இந்த நிமிடம்வரை, பிரதமர் மோடியையோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ அல்லது பாஜகவின் கொள்கைகளையோ, தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களையோ, இதுவரை அதிமுக விமர்சிக்காமலேயே உள்ளார்..
எடப்பாடி பழனிசாமி: அவ்வளவு ஏன, ஆரியர், திராவிடர் குறித்த ஆளுநரின் கருத்துக்குகூட, எடப்பாடி பழனிசாமி இதுவரை, ஒரு வார்த்தை எதிர்த்து பேசவும் இல்லை, ஆதரித்து பேசவும் இல்லை.. சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை, திமுக கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக சலசலக்கப்படும் அமமுக தினகரன்கூட, "ஒரு அரசியல்வாதிபோல ஆளுநர் செயல்படுகிறார்" என்ற துணிந்து சொல்லியிருந்த நிலையில், எடப்பாடி வாயே திறக்கவில்லை.
இப்போது மசோதாக்களை திருப்பியனுப்பிருக்கும் விவகாரத்தில் எடப்பாடி என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியை முறித்துள்ளதால், இன்றைய தினம் ஆளுநர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட போகிறாரா? அல்லது திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட போகிறாரா? என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள்: பாஜகவுடன் உறவை முறித்துள்ளது, அரசியல் ஸ்டன்ட் என்று எதிர்க்கட்சிகள் அதிமுகவை சாடிவரும் நிலையில், இதில் எந்த முடிவை அதிமுக எடுக்க போகிறது? என்பதை பாஜகவும் உற்று கவனித்து வருகிறது.
ஆனால், இன்று விவசாய பிரச்சனையை அதிமுக எழுப்பப் போவதாக கூறப்படுகிறது. முன்னதாக, இன்று அவை கூடுவதற்கு முன்பு, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவுடன், அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார்.. விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி கோரி இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இன்று விவசாய விஷயத்தை அதிமுக கையில் எடுக்க உள்ளதால், மசோதா குறித்து என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.
சந்திப்பு: இன்றைய கூட்டம் முடிந்ததுமே, செய்தியாளர்களை சந்திக்க போவதாக, எடப்பாடி பழனிசாமி சொல்லி உள்ளதால், அதுகுறித்த கூடுதல் எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications