"ஓபிஎஸ்ஸோடவா நிற்க வச்சீங்க".. பாஜகவிற்கு செம அதிர்ச்சி வைத்தியம் தரப்போகும் எடப்பாடி? மாஸ்டர்பிளான்
சென்னை: மதுரைக்கு வந்த பிரதமர் மோடியை கடந்த வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் ஒன்றாக வரவேற்றனர். இந்த விஷயம்தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையும், அதை தொடர்ந்து மறுநாளே உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்ததும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணம் பாஜகவில் ஏற்படுத்திய அதிர்வலைகளை விட அதிமுகவில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர்செல்வத்தையும் ஒன்றாக சந்தித்தார். இந்த சந்திப்புதான் அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது.

மோடி சந்திப்பு
மோடியை தனியாக சந்தித்து பேசி இரண்டு பேருமே தனி தனியாக நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் இரண்டு பேருக்குமே தனியாக நேரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இரண்டு பேருமே விமான நிலையம் வாருங்கள், பிரதமர் மோடியை வரவேற்கலாம் என்று மட்டுமே இரண்டு பேருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று பின்னர் மாலை வரை காத்திருந்து அவரை வழியனுப்பி வைத்தனர்.

ஒன்றாக வந்த இருவர்
விமான நிலையம் வந்த எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் இருவரையும் ஒன்றாக தன்னை நோக்கி வரும்படி மோடி அழைத்து இருக்கிறார். எடப்பாடியும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்த கைகளாக இருக்க வேண்டும் என்பதை எடப்பாடிக்கு உணர்த்தும் வகையில் இருவரின் கைகளையும் மதுரை ஏர்போர்ட்டில் சேர்த்து வைத்தார் மோடி என்கிறார்கள் நேரில் இந்த சந்திப்பை பார்த்தவர்கள். இதனை எடப்பாடி எதிர்பார்க்காததால் ஏகத்துக்கும் அவர் அப்செட்டானார்.

தனியாக அழைக்கவில்லை
தன்னை தனியாக அழைக்கவில்லை. ஓபிஎஸ்ஸுக்கும், எனக்கும் ஒரே அளவு மரியாதை கொடுப்பது தவறு என்று எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறாராம். இது அனைவரும் அறிந்த தகவல்தான். இந்த நிலையில், இந்த சம்பவத்தை எடப்பாடி தரப்பில் ஒரு முக்கிய பிரமுகரும் காங்கிரஸின் வியூக வகுப்பாளராக இருக்கும் முக்கிய "மாஸ்டர்மைண்ட்" ஒருவரும் பரஸ்பரம் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த விவாதத்தில், ஒற்றைத் தலைமையைத்தான் அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்பதை எடப்பாடி , அடிக்கடி பாஜகவுக்கு உணர்த்தியபடி இருக்க வேண்டும்.

அப்செட்
அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தான் துடிக்க வேண்டும். எடப்பாடி துடிக்கிற மாதிரி எந்த சந்தர்ப்பத்திலும் தோற்றம் உருவாகிடக் கூடாது. தேர்தல் நெருங்கும் சூழலில், சீட் எண்ணிக்கையை மிகவும் குறைத்துதான் எப்படியும் திமுக பேரம் பேசுவார்கள். அந்த குறைவான சீட்டை ஏற்காமல் காங்கிரஸே வெளியேறும் சூழல் உருவாகும். அதோடு திமுக - காங்கிரஸ் இடையே உயர் சாதி இடஒதுக்கீடு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டது உள்ளிட்ட விஷயங்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படலாம்.

என்ன நடந்தது?
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் போது, பாஜகவுக்கு செக் வைக்கும் விதத்தில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாகும். அது திமுக,பாஜக இரு கட்சிகளுக்கும் நாம் கொடுக்கப்போகும் அதிர்ச்சி வைத்தியம். அதனால், சாதுர்யமாக எடப்பாடி அரசியல் செய்ய வேண்டும் " என்று வியூகம் போட்டுக்கொடுத்துள்ளாராம் அந்த மாஸ்டர் மைண்ட். அதாவது எடப்பாடியை ஒற்றை தலைமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறி அதிர்ச்சி கொடுக்க எடப்பாடி தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications