ஆன்லைனில் ஓட்டா? வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்ளும் நடிகை ஜோதிகா.. விளாசி தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: லோக்சபா தேர்தலில் ஏன் ஓட்டளிக்கவில்லை என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா, ‛‛ஆன்லைனில் கூட இருக்கில்ல'' எனக்கூறியது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு ஓட்டுப்போடாத ஜோதிகாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது ஸ்ரீகாந்த் என்ற படத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.
இந்த படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் சென்னை பல்லாவரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா பங்கேற்றார்.

இந்த வேளையில் அவரிடம் பத்திரிகையாளர்கள் நிறைய கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். அப்போது தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலில் நடிகை ஜோதிகா ஓட்டளிக்கவில்லை. இதுதொடர்பாகவும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதுவரை சிரித்தபடி பதிலளித்த ஜோதிகாவின் முகம் இந்த கேள்வியை எதிர்கொண்டபோது சற்று மாறியது.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தேர்தல் வந்தபோது நீங்கள் ஓட்டுப்போடவில்லை என உங்களை நிறைய பேர் விமர்சனம் செய்தனர். இதற்கு உங்களின் கருத்து மற்றும் பதில் என்ன?'' என கேள்வி கேட்டார். அதற்கு ஜோதிகா, ‛‛வருஷம் வருஷம் ஓட்டுப்போடுவேன்'' என்றார். இந்த வேளையில் அங்கிருந்தவர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை என திருத்தினர்.
இதையடுத்து, ‛‛ஆம், ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டளிப்பேன். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் சில நேரங்களில் ஊருக்கு வெளியே இருக்க வேண்டிய நிலை வரும். வேலைக்காக, உடல்நலக்குறைவால் இது நடக்கலாம். இது தனிப்பட்ட விஷயம். சில நேரங்களில் நாம் தனிப்பட்ட முறையில் ஓட்டளிக்கலாம். ஆன்லைனில் கூட இருக்கில்ல. எப்போதும் எல்லாவற்றையும் பொது வெளியில் வைக்க வேண்டியது இல்லை. சில விஷயங்கள் தனிப்பட்டதாக இருக்கலாம். அதற்கு மரியாதை அளிக்க வேண்டும்'' என்றார்.
இந்நிலையில் தான் ஜோதிகா கூறிய ‛‛ஆன்லைனில் கூட இருக்கில்ல'' என்ற வார்த்தை தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது ஜோதிகா ஆன்லைனில் ஓட்டுப்போட்டாரா? இந்தியாவில் ஆன்லைனில் ஓட்டுப்போடும் முறை இல்லவே இல்லையே. அப்படியென்றால் ஜோதிகா எப்படி ஆன்லைனில் ஓட்டுப்போட்டார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, ‛‛தேர்தலில் ஆன்லைனில் ஓட்டளிக்கும் முறை இருப்பது தெரியாமல் போச்சே.. இது தெரிந்து இருந்தால் நீண்ட வரிசையில் நிற்காமல் வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஓட்டு போட்டு இருப்பேனே'' எனக்கூறி ஜோதிகாவை கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications