"அந்த" பயம் இருக்கட்டும்..சீனில் வரும் பாஜக.. திமுகவின் அந்தர் பல்டியா..நடுநிலைமையா?கிளம்பிய விவாதம்
: சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி தந்துள்ளார்
சென்னை: இன்று தீட்சிதர்கள் குறித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ள கருத்து, முக்கிய விவாதத்தை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டு வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும் தலையிடாது.
பொதுக் கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

கணக்கு
மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து சமய அறநிலை துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்கு வழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறை தான்.. இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது என்று பேட்டி தந்துள்ளார்.. இந்த பேட்டியானது, இருவேறு கருத்துக்களை தாங்கி வருகின்றன.. இதற்கு காரணம், திமுக ஆட்சியில் இப்படியான உத்தரவுகள் வெளிவந்து கொண்டிருப்பது ஒருசாராரால் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

குழப்பம்
ஆரம்பத்தில் சேகர்பாபுவுக்கு எந்த துறையை ஒதுக்குவது என்ற குழப்பம் திமுகவுக்கு இருந்ததாக சொல்லப்பட்டது.. ஜெ.காலத்தில் இருந்தே, தன்னுடைய தனி செல்வாக்கால், தனி முத்திரையை பதித்தவர் சேகர்பாபு... இவருக்கு அறநிலையத்துறையை ஒதுக்கியதுமே, இந்த துறையா? என்று வியந்தனர்.. காரணம், கடந்த கால ஆட்சிகளில் அவ்வளவாக பேசப்படாத ஒரு சைலண்ட் துறைதான் இந்து சமய அறநிலையத்துறை.. ஆனால், இன்று களத்தில் அதிகம் பேச வைத்து கொண்டிருப்பது இந்த துறை தான் என்பதை மறுக்க முடியாது.

பண்டிகைகள்
இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுக கடந்த காலங்களில் பார்க்கப்பட்டு வந்தது.. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத நடைமுறையே இதற்கு சாட்சியாகவும் விளங்கின.. இந்துக்களுக்கு எதிராக திமுக அரசியல் செய்கிறது என்ற வழக்கமான குற்றச்சாட்டை பாஜகவின் எச்.ராஜா முதல் வானதி சீனிவாசன் வரை விதைத்து வருகிறார்கள்.. எனினும், சமீபகாலமாகவே, திமுக தன் போக்கை லேசாக மாற்றி கொண்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

பட்டினப்பிரவேசம்
பட்டினப்பிரவேச விவகாரத்தில் இது வெளிப்பட்டது.. "ஆன்மீக அரசு என்ற ஒன்று இல்லை. இது எல்லாருக்குமான அரசு" என்று சேகர்பாபு சொன்னதில் நியாயம் இல்லாமல் இல்லை.. அரசு என்பது வேறு, ஒரு கட்சியின் சொந்த கருத்தியல்கள் என்பது வேறு. இதைதான் பிரித்தும், வகுத்தும் திமுக அரசியல் செய்துவருகிறது.. அதற்காக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கடைசிவரை வெறுத்த, கருணாநிதியின் சிலையை, ஆர்எஸ்எஸ்ஸின் அபிமானியான வெங்கைய்யா நாயுடுவை கொண்டே திறக்க வேண்டுமா? வேறு யாரையும் வைத்து சிலையை திறக்க முடியாதா? என்ற கேள்விகளும் எழவே செய்தன.

நடுநிலைமை
இன்றைய தினம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து, அமைச்சர் சொன்ன கருத்தும், இருவேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.. ஒரு நடுநிலையான அரசு, அனைவருக்கும் பொதுவான அரசு இப்படித்தான் பேச முடியும்" என்கிறார்கள் என்று அமைச்சரின் பேச்சுக்கு ஆதரவு தருகிறார்கள் ஒருசாரார்.. ஆனால், மற்றொரு தரப்பினரோ, "சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலைய துறை எப்போதும் எடுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டே ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளதே? திமுக நினைத்தாலும், சொந்தம் கொண்டாட முடியாதே? என்று கேட்கிறார்கள்.

அந்த பயம்
அதுமட்டுமல்ல, சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை, தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக பல வருடங்களாகவே குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், தலித் சமூகத்தை சேர்ந்த நந்தனார் நுழைந்ததாக சொல்லப்படும் சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் அடைக்கப்பட்டுள்ளது ஏன்? என்றும் கேள்விகள் எழுகின்றன.. எல்லாவற்றிற்கும் மேலாக, "அந்த பயம் இருக்கட்டும்" என்றும் திமுகவின் நடவடிக்கைகளுக்கு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆக மொத்தம், அமைச்சர் சேகர்பாபுவின் இந்த பேட்டியும் ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications