ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா? அண்ணாமலை மறைந்த உண்மை சொல்லட்டுமா? தராசு ஷ்யாம் கேள்வி?
சென்னை: அண்ணாமலை சொல்வதைப் போல் ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா என்பது குறித்து அவருடன் நெருங்கிப் பழகிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா ஒரு சிறந்த இத்துத்துவா தலைவர். அவர் விட்டுச் சென்ற இடத்தை பாஜக நிரப்பி வருகின்றது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இவரது கருத்தைப் பலரும் மறுத்து வருகின்றனர். குறிப்பாக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகக் கடைசிவரை அவருடன் இருந்த சசிகலா, "அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராகத் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அரசியல் கொள்கை என்பது இந்துத்துவா கருத்துகளைக் கொண்டிருந்ததா? என்பது மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
இவர் 'தாய்' பத்திரிகையில் பணியாற்றிய காலகட்டத்தில் ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகியவர். ஆகவே அவர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமாக உள்ளது.
இந்தச் சர்ச்சை பற்றி ஷ்யாம் பேசும்போது, "அண்ணாமலையின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சி என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்துத்துவா என்பது வேறு. இந்து இஸம் என்பது வேறு.
இது பற்றி சாவர்கர் நிறைய விளக்கங்களை அளித்திருக்கிறார். இந்துத்துவா என்பது இந்து ராஷ்டிராவை உருவாக்குவது. இந்துக்கள் உயர்வானவர்கள். இந்து மதம் உயர்வானது. இந்துக்கள் வாழும் நாடு உயர்வானது.
அதாவது இந்து நாடு என்பது புனித பூமி. இந்தப் புனித பூமி மீது நம்பிக்கை இல்லை என்றால், இந்துத்துவா என்பது இல்லை என்கிறார் சாவர்க்கர். இதுதான் இந்துத்துவா கருத்து.

இதில் ஜெயலலிதா எப்படிப் பட்டவர் என்பதைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா மத நம்பிக்கை உடையவர். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. எம்.ஜி.ஆரும் அப்படித்தான். மூகாம்பிகை கோயிலுக்குத் தங்க வாளை பரிசளித்திருக்கிறார். அதே மண்டைக்காடு கலவரம் வரும் போது மதத்தையும் கடுமையாக எதிர்த்தார்.
முதல்வராகி எம்.ஜி.ஆர் டெல்லி சென்றபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்து மஞ்ச் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தியது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர்., 'இவர்கள் மீது உள்ள மரியாதையே போய்விட்டது' என்று பேசி இருக்கிறார்.
ஜெயலலிதா அவரது ஆட்சியில் ஒரே ஒரு பரிசோதனை முயற்சியை எடுத்தார். 2002இல் 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' கொண்டு வந்தார். கருணாநிதி இதை எதிர்த்தார். ஆனாலும் அதிமுக பெரும்பான்மை இருந்ததால் சட்டம் நிறைவேறியது.
அடுத்து 2004 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதற்கு முக்கிய காரணமாக இந்தச் சட்டம் இருந்தது. அதன்பின்னர் 2006இல் அந்தச் சட்டத்தை நீக்கினார்.
ஜெயலலிதா மீது அண்ணாமலை இந்துத்துவா முத்திரை குத்துவதற்கு இந்தக் கட்டாய மதமாற்றச் சட்டம் என்ற ஒரே ஒரு முகாந்திரமாக உள்ளது. அதை அண்ணாமலையும் தனது பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததை அண்ணாமலை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் அதைத் திரும்ப பெற்றத்தைச் சொல்லாமல் மறந்துவிட்டார்.
ஜெயலலிதா மகாபாரதம், ராமாயணம் மீது நம்பிக்கைக் கொண்டவர். அதை நேசித்தார். வீட்டில் பூஜை அறை வைத்திருந்தார். வைஷ்ணவ சம்பிரதாய முறைகள் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இவை எல்லாம் சரிதான். ஆனால் அனைத்து மதத்திற்கு அவர் சமமான மரியாதையைக் கொடுத்தார்.

ஆகவே ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் எனச் சொல்ல முடியாது. அண்ணாமலை சொல்வது போல் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் அல்ல. அந்தக் கருத்தை என்னால் ஏற்க முடியாது.
தீவிர இந்துமத பற்றாளர்கள், உயர்சாதி இந்துக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தார்கள். அது உண்மைதான். அந்த வாக்குவங்கி என்பது எத்தனை சதவீதம் என்பதைப் பார்க்க வேண்டும்? அது வெறும் 2% தான் இருக்கும். அவருக்கு இதைவிட அதிக அளவில் இந்து மதத்தைச் சேராத மக்கள் வாக்களித்துள்ளனர்" என்கிறார்.












Click it and Unblock the Notifications