‘கட்டெறும்பு’ பாஜகவில் இருந்து நீக்கமா? பரவி வரும் அறிக்கை.. விளக்கம் அளித்த கரு.நாகராஜன்!
சென்னை: கட்டெறும்பு என்ற இசக்கி முத்து, பாஜகவில் இருந்து நீக்கப்படுவதாக ஒரு அறிக்கை பரவிய நிலையில், அது போலியானது எனத் தெரிவித்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
சமூக வலைதளத்தில் 'கட்டெறும்பு’ என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருபவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி முத்து. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருக்கிறார். பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் பதிவிடுவது இவரது வழக்கம்.

இந்நிலையில், “கட்டெறும்பு என்ற இசக்கி முத்து நம் கட்சிப் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்துள்ளார், தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார், எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டு பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாஜகவை சேர்ந்த பலருமே கூட இது உண்மையா என்ற வகையில் ஐயத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், “யாரோ போலியானவர்கள் போலியாக ஒரு கடிதத்தை பரப்பி வருகிறார்கள். யாரும் நம்ப வேண்டாம். நன்றி வணக்கம்!” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து சாதி மோதலையும், வன்முறையையும் தூண்டும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் கட்டெறும்பு என்ற இசக்கி முத்து ஒரு பதிவை வெளியிட்டார்.
வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதன் பேரில், ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் பதிவு செய்த திருச்செந்தூரை சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இசக்கி என்ற இசக்கிமுத்து மீது வழக்கு பதியப்பட்டது.
4 பிரிவுகளின் கீழ் இசக்கி முத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணைக்கு பிறகு பாஜக பிரமுகர் கட்டெறும்பு என்ற இசக்கியை கைது செய்த ஸ்ரீவைகுண்டம் போலீசார், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உடல் நல பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்பு கடிதம் எழுதிய கட்டெறும்பு என்ற இசக்கி, நான் தற்போது என்னுடைய தவறை உணர்ந்துவிட்டேன். இதுபோன்ற தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications