"லாபி" பண்ணனும்? சூரியனிடம் வரும் "பச்சை" அம்பு.. ஸ்டாலின் முடிவுதான்! பீகாரில் விதை போட்டாச்சு!
சென்னை: தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் பெரிய கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. முக்கியமாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதற்கான முயற்சிகளை தீவிரமாக செய்து வருகிறார்.
தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க பல மாநில முதல்வர்கள் இதற்கு முன்பே முயன்று இருக்கிறார்கள். முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர சேகர ராவ் 2019 லோக்சபா தேர்தலில் இதற்காக முயற்சிகளை தீவிரமாக செய்தார்.
அவரை தொடந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட முயன்றார். சில மாதங்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதற்கான முயற்சிகளை செய்து வந்தார்.

காங்கிரஸ்
ஆனால் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் உருவாகவே இல்லை. இதற்கு மறைமுக காரணம் காங்கிரஸ் என்றுதான் கூற வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கினால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும். இது பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும். இதனால் காங்கிரசை கட்சியை சேர்த்துக்கொண்டுதான் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் சமரசமாக செல்ல தெலுங்கானா கேசிஆர், ஆம் ஆத்மி கெஜ்ரிவால் போன்றவர்கள் தயாராக இல்லை.

சமாதானம்
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி காங்கிரஸிடம் சமரசமாக செல்ல முயன்றார். ஆனால் மம்தாவை காங்கிரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தேசிய அளவில் பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாவதை காங்கிரஸ் இப்படி தனக்கே தெரியாமல் தடுத்து வந்தது. காங்கிரசை வைத்துக்கொண்டு கூட்டணியை உருவாக்குவதா , காங்கிரஸ் இல்லாமல் கூட்டணியை உருவாக்குவதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராகுல் காந்தியை நேற்று இரவு சந்தித்தார்.

கூட்டணி
காங்கிரஸ் உட்பட எல்லா எதிர்கட்சிகளையும் ஒன்று திரட்டுவதற்கான சந்திப்பாக இது பார்க்கப்படுகிறது. பீகாரில் சமீபத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி முறிந்தது. கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜேடியூ நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவுடன் கூட்டணி வைத்தார். இந்த நிலையில்தான் ராகுல் காந்தியை நிதிஷ் குமார் சந்தித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றி இவர்கள் ஆலோசனை செய்து உள்ளனர். இதில் தனக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை, ஆனால் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் என்று ராகுலிடம் நிதிஷ் குமார் சொன்னதாக கூறப்படுகிறது.

விதை
இதன் மூலம் காங்கிரசுடன் சமாதானம் செய்யவும், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்கவும் நிதிஷ் குமார் முயற்சி செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரின் சமீபத்திய பேச்சுகளும் இதற்கான சந்தேகங்களையோ ஏற்படுத்தி உள்ளன. நிதிஷ் குமார் வரும் நாட்களில் பல்வேறு மாநில முதல்வர்களை சந்திக்க உள்ளார். சமீபத்தில்தான் அவர், கேசி ஆரை சந்தித்தார். விரைவில் நிதிஷ் குமாரின்
"பச்சை அம்பு" சின்னம் தமிழ்நாட்டின் உதய சூரியனை நோக்கியும் பாயும் என்கிறார்கள் தேசிய அரசியல் தலைவர்கள்.

சந்திப்பு
விரைவில் நிதிஷ் குமார் - ஸ்டாலின் இடையே சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் மாநில கட்சிகளில் தற்போது காங்கிரசுடன் நட்பாக இருக்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ளும் காங்கிரஸ் அல்லாத ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. இன்றும் கூட முரசொலியில் ராகுலை புகழ்ந்து பெரிய தலையங்கம் வெளியாகி உள்ளது. அந்த அளவிற்கு ஸ்டாலின் - ராகுல் உறவு நன்றாக உள்ளது.












Click it and Unblock the Notifications