பத்திரிகையாளர்களிடம் போட்டுடைத்த ரஜினி.. ஆளுநர் ரவிக்கு நெருக்கடி! பாய்ண்டை பிடித்த மார்க்சிஸ்ட்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசுவதற்கு ஆளுநர் மாளிகை ஒன்றும் கட்சி அலுவலகம் கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "மரியாதை நிமித்தமாக ஆளுநர் 20 முதல் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினேன்.
ஆளுநர் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அதிகம் நேசிக்கிறார். இங்குள்ள மக்களின் ஆன்மீக உணர்வு அவரை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நண்மை செய்ய தயாராக உள்ளதாக அவர் சொன்னார்." என்றார்.

நோ கமெண்ட்ஸ்
ஆளுநரிடம் அரசியல் குறித்து விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அரசியல் பற்றி விவாதித்தோம். இப்போது அதுபற்றி சொல்ல முடியாது." என்றார். ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "நோ கமெண்ட்ஸ்" என்று கூறி "அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை" என்று கூறினார்.
Recommended Video

கே.பாலகிருஷ்ணன் கருத்து
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.

கட்சி அலுவலகம் அல்ல
ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

போட்டி அரசு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது.
தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொருத்துக்கொள்ளப் போகிறோம்?!












Click it and Unblock the Notifications