ஓபிஎஸ்-க்கு கிடைத்த பாசிட்டிவ் மெசேஜ்.. வழக்கு திரும்புது ‘மன்னிப்பு கேட்டதே’ அதற்குத்தானே- அடுத்து?
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மீது ஓபிஎஸ் தரப்பு கடுமையாக அதிருப்தி அடைந்த நிலையில், நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். இது ஓபிஎஸ் தரப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
வழக்கிற்கு தேவையற்ற வகையில் கருத்து தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவால் கோபமடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இது கீழ்த்தரமான செயல் என மீண்டும் விமர்சித்திருந்தார். இதையடுத்து மீண்டும் தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் முறையீடு செய்திருந்தார்.
நாங்க தான் இனிமே எல்லாம்! ராஜேந்திர பாலாஜியை கடுப்பாக்கிய ஓபிஎஸ் டீம்! விறுவிறு விருதுநகர் அதிமுக!
ஐகோர்ட்டில் விசாரணை
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.
ஓபிஎஸ் முறையீடு
அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11ல் பிறப்பித்த உத்தரவில், ஓ.பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணன் ராமசாமி
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கும்படி வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று இன்று பிற்பகலுக்கு வழக்குகளை நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், நீதிபதியை மாற்றம் கோரி ஓபிஎஸ் மனு அளித்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.
மீண்டும் முறையீடு
அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு மீண்டும் முறையிட்டது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓபிஎஸ் தரப்பின் நடவடிக்கையை கீழ்த்தரமான செயல் என விமர்சித்து தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாபஸ் பெற்ற ஓபிஎஸ்
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதியிடம் முறையிட்டதற்கு மன்னிப்புக் கோரிய பன்னீர்செல்வம் தரப்பில், ஏற்கனவே இரு முறை இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால் மற்றொரு நீதிபதி புதிதாக விசாரணை நடத்துவதே முறையாக இருக்கும் எனவும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனக் கூறி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கனவே இரண்டு முறை இந்த விவகாரத்தை விசாரித்து, கருத்தை வெளிப்படுத்தி, உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது எனக் கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
மன்னிப்பு கேட்டதற்கு காரணம் என்ன?
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடுமையாக விமர்சித்த பிறகு மீண்டும் முறையீடு செய்தது தவறு என ஓபிஎஸ்ஸுக்கு மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ஒருவேளை நீதிபதி இப்போதும் மாற்றப்படாவிட்டால் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு இல்லை என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. நீதிபதியை இந்தளவுக்கு பகைத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்தே, ஓபிஎஸ் தரப்பு நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நீதிபதி ஜெயச்சந்திரன்
இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஓபிஎஸ் தரப்புக்கு சாதகம்
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியோடு கடுமையாக முட்டிக்கொண்ட சூழலில், அதிமுக பொதுக்குழு வழக்கை அவர் தொடர்ந்து விசாரித்தால், ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்பட்டது. அதனால், மோதல் போக்கைத் தவிர்க்கும் நோக்கத்திலேயே இன்று நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.