2026 தேர்தல்: அதிமுகவுக்கு பாஜக உதவுகிறதா, காலை இழுத்து விடுகிறதா?
சென்னை: செப்டம்பர் 8 அன்று, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் சீனியர் தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை டெல்லியில் சந்தித்தார். கட்சியை விட்டுச் சென்ற அனைவரையும் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர் 10 நாள் காலக்கெடு விதித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், அ.தி.மு.க.வின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைப்பது பற்றி அவர் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடுவது இது முதல் முறையல்ல. 2017-ல், ஓ. பன்னீர்செல்வம் தனது பிரிவை எடப்பாடி பழனிசாமியின் தலைமையுடன் இணைத்தது, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படிதான் என்று அவர் பலமுறை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க.வில் இப்போது ஒரு 'அனைவரையும் அரவணைத்துச் செல்லும்' தலைமை இல்லாததால் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமை கொண்ட தலைவர்கள் இல்லாததால், கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. ஆனால், ஜெயலலிதாவே தலைமைக்கு வர சில ஆண்டுகள் ஆனது. சாதாரண பின்புலத்திலிருந்து வந்த பழனிசாமி தலைமைப் பதவியில் இத்தனை காலம் நீடித்தது ஆச்சரியமான ஒன்று.
ஜாதி ஆதரவு
எடப்பாடி பழனிச்சாமி, பிற தலைவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லாததால், இப்போது சாதி அடிப்படையிலான ஆதரவு மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது. ஜெயலலிதாவோ தன்னை எதிர்த்து ஜானகி அணிக்கு போனவர்களையும் தனது அமைச்சரவையில் பதவி கொடுத்தார். இதுதான் வித்தியாசம். பழனிசாமிக்கு கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர் ஆதரவு தருகின்றனர், அதே சமயம் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர், ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் பழனிசாமி அணியால் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனர். அதேநேரம், நாடார்களில் கணிசமானோர் எடப்பாடியை ஆதரிக்கிறார்கள். இன்பதுரைக்கு எடப்பாடி கொடுக்கும் முக்கியத்துவம், அவரை எம்.பி.யாக்கியது போன்றவையும் இதற்கு காரணம்.
அதேநேரம் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்களை உறுதி செய்ய ஆர்.பி. உதயகுமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் போன்ற தலைவர்கள் மதுரை சுற்று வட்டாரத்தில் தீவிரமாக களமாடி வருகிறார்கள்.
பாஜக தலையீடு
அ.தி.மு.க. சிதைந்து வருகிறது என்று நினைத்து, தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளைப் பெற பா.ஜ.க. முயற்சிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை குறுகிய கால சிந்தனை கொண்டது. ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பிரிவுகளை இணைப்பதன் மூலம், சசிகலாவை வெளியே வைத்திருப்பது பா.ஜ.க.வின் நோக்கமாக இருந்தது. தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒரு வலுவான அ.தி.மு.க. கூட்டணியை அமைத்து தி.மு.க.வை எதிர்கொள்ள பா.ஜ.க. விரும்புகிறது. எதிர்காலத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை பா.ஜ.க. கைப்பற்றவும் வாய்ப்புள்ளது.
பாஜக எதிர்பார்க்கும் பலன்
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. போன்ற தேசியக் கட்சிகள் பலமுறை தோல்வியடைந்துள்ளன. டெல்லியில் இருந்து தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பழனிசாமியை தொல்லை செய்யாமல் பதவியில் வைத்திருந்ததற்காக பா.ஜ.க. அ.தி.மு.க.விடம் பிரதிபலன் எதிர்பார்க்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழக வாக்காளர்கள் மனநிலை
அதேநேரம், தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவு தருவதில்லை. புதிய தலைமுறை வாக்காளர்கள் ஆதரவு தரும்போதுதான் கட்சிகள் பலம் பெறுகின்றன. தி.மு.க.வின் ஆதரவு ஒரு குறிப்பிட்ட தலைமுறையினருடையது. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறியபோது, அவர் அடுத்த தலைமுறையினரின் ஆதரவைப் பெற்றார். எனவே, ஒரு கட்சியின் வாக்கு வங்கியை மற்றொரு கட்சி முழுமையாகக் கைப்பற்றுவது சாத்தியமில்லை.
பாஜகவால் முடியுமா
ஒரு கட்சியின் வளர்ச்சி, அதன் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். பிற மாநிலங்களில் பாஜக ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள். தமிழகத்திலும் ரிசல்ட் அதைப் பொறுத்துதான் இருக்கும். எனவே என்னதான் அதிமுகவை ஆட்டி வைத்தாலும், பாஜகவாக மக்களிடம் செல்வாக்கு பெறும் வரை அதிமுகவின் ஓட்டு வங்கியை பாஜக எடுத்துக்கொள்வது சாத்தியமில்லாதது. ஓரளவுக்கு மட்டுமே அது பலன் தரும் என்கிறார்கள், நாம் பேசிய பல அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications