முதல்வர் திறந்த மத்திய கைலாஷ் மேம்பாலம்.. தரமற்ற கட்டுமானமா? அதிர்வுகள் குறித்து விளக்கம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் ₹60 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்ட 652 மீட்டர் நீளமுள்ள மத்திய கைலாஷ் மேம்பாலத்தில் (எல் வடிவ மேம்பாலம், பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்வுகளை உணர்வதாகப் புகார்கள் எழுந்திருக்கிறது.. இந்த புகார் குறித்து ஆங்கில ஊடகத்திற்கு அதிகாரிகள் அளித்த பேட்டியில், புகார்கள் குறித்து ஆய்வு செய்வதாகவும், பாலம் தார்மீக ரீதியாக பாதுகாப்பானது என்றும், காலப்போக்கில் இந்த அதிர்வுகள் கான்கிரீட்டில் சரியாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக ஓஎம்ஆர் சாலை இருக்கிறது. இது அடையாறு மத்திய கைலாஷ் தொடங்கி, இந்திரா நகர், திருவான்மியூர் ஐடி பார்க், தரமணி,பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக கேளம்பாக்கம், சிறுசேரி கடந்து திருப்போரூர் போகிறது. இந்த சாலை தொடங்கும் என்றால் மத்திய கைலாஷ் பகுதியில் சா்தாா் படேல் சாலையில் இருந்து துவங்குகிறது.

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்த 2 சாலைகளும் சந்திக்கும் இடம் 'டி' வடிவில் இருக்கும் இச்சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு, சா்தாா் படேல் சாலையிலிருந்து ஓஎம்ஆர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் எல் வடிவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 'எல்' வடிவ மேம்பாலத்தை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும், 652 மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால் நெரிசல் கணிசமாக குறைந்தள்ளது. ஆனால், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தப் பாலத்தில் பயணம் செய்வது மிகவும் குலுங்கலாக இருப்பதாகச் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன.
நிபுணர்கள் சொல்வது என்ன
சர்தார் படேல் சாலையில் இருந்து பாலத்தின் முதல் 80 மீட்டர் தூரம் தார்ச்சாலையா இருப்பதால் அங்கு அதிர்வுகள் இல்லை. ஆனால், மீதமுள்ள பகுதி சிமெண்ட் கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு சாலை சீரற்றதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக நிபுணர்கள் கூறும் காரணங்களை பார்ப்போம்.
தாங்கிகளின் விலகல்
மேம்பாலத்தைத் தாங்கும் இரும்பு கம்பிகள் மற்றும் வயரிங் அமைப்புகள், வாகனங்களின் எடைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு வளையும் தன்மை கொண்டவை. இதற்கான 'லோட் டெஸ்ட்' செய்யும் போது கணக்கீடுகள் தவறாக இருந்தால், வாகனங்கள் செல்லும் போது எதிர்பார்த்ததை விட அதிகமாக பாலம் அமுங்கலாம். இது நீண்ட கால அடிப்படையில் பாலத்தின் கீழே விரிசல்களை ஏற்படுத்தி, அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
கான்கிரீட் தரம்
பொதுவாக தமிழ்நாட்டில் M40 ரக கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், டெல்லி போன்ற இடங்களில் மெட்ரோ வழித்தடங்களுக்கு M90 ரக கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் தரம் உயர உயரத்தான் பாலம் அதிக உறுதித்தன்மையுடன் இருக்கும்.
சீரற்ற தளம்
கான்கிரீட் கலவையைப் பரப்பும் போது சரியாக சமப்படுத்தாமல் விடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டு விரிவு இணைப்புகளுக்கு (Expansion Joints) இடையே வெறும் 10 மி.மீ உயரம் மாறினால் கூட, வாகனங்களில் செல்லும் போது பெரிய அதிர்வு ஏற்படும். இப்போது பாலம் திறந்து விடப்பட்டதால், கான்கிரீட்டை அகற்றிவிட்டு மீண்டும் அமைப்பது என்பது இயலாத காரியம் என்று நிபுணர்கள் கூறினார்கள்.
அதிகாரிகளின் விளக்கம்
இது குறித்து பாலம் அமைத்த திட்ட அதிகாரிகள் கூறுகையில், தார்ச்சாலையுடன் ஒப்பிடும்போது கான்கிரீட் சாலைகளில் சமதளம் சற்று குறைவாகவே இருக்கும் என்றார்கள். மேலும் புகார்கள் குறித்து ஆய்வு செய்வதாகவும், பாலம் தார்மீக ரீதியாக பாதுகாப்பானது என்றும், காலப்போக்கில் இந்த அதிர்வுகள் கான்கிரீட்டில் சரியாகிவிடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications