"எடப்பாடி பழனிசாமி அண்டு கம்பெனி".. திமுக, அதிமுகவை சேர்த்து வெளுக்கும் டிடிவி தினகரன்.. என்ன காரணம்
எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுவை விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்
சென்னை: அதிகாலையில் வீடு புகுந்து கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. மேலும் வன்முறையை தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 5-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் ஏராளமானோர் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்..
அதேபோல, அமமுகவை சேர்ந்தோரும் ஏராளமானோர் திரண்டு மரியாதை செலுத்தினர். அப்போது அமமுக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் ஒரே சமயத்தில் திரண்டு வந்துவிட்டதாக தெரிகிறது..

தள்ளுமுள்ளு
இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.. இது நீண்ட நேரத்துக்கு அங்கு பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.. இந்த சூழலில்தான், எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்த கார் மீது சிலர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த செருப்பு வீச்சு சம்பவம் அதற்கு மேல் பரபரப்பை தந்துவிட்டது.. செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக அதிமுகவின் மாறன் என்பவர், அண்ணாசதுக்கம் நிலையத்தில் ஒரு புகார் தந்தார்.. அந்த புகாரில் செருப்பு வீச்சுக்கு அமமுகவினர்தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த புகாரின் அடிப்படையில் அமமுகவினர் 50 பேர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்... இறுதியில், எடப்பாடி பழனிச்சாமி காரை மறித்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, வீடியோ ஆதாரம் வலுவாக இருந்ததாககூறி, திருவல்லிக்கேணியை சேர்ந்த அமமுக நிர்வாகி மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.. இவரை தவிர, இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைது
இந்த கைது நடவடிக்கைக்குதான் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், வன்முறையை தூண்டும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக திமுக போலீஸ் செயல்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்... அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:

கண்டனம்
மெரினா கடற்கரை சம்பவம் குறித்து கழகத்தின் சார்பில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு முறையான விசாரணை இன்றி அமமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதிமுகவில் நடக்கும் அதிகார மோதல் சொந்தக் கட்சி தொண்டர்களை குண்டர்களை வைத்து தாக்கும் நிலைக்கே சென்று இருப்பதை நாடறியும். அதையெல்லாம் மறைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மீது வீண்பழி சுமத்தி தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

விசாரணை
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முறையான விசாரணை எதுவும் நடத்தாமல் சென்னை மாநகராட்சியில் 114 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு.சுதாகர், 114 மேற்கு வட்ட கழகச் செயலாளர் திரு.அற்புதராஜ், 63 தெற்கு வட்ட கழக செயலாளர் மதுசூதனன் ஆகியோரை எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் இன்று அதிகாலை வீடு புகுந்து கைது செய்திருக்கிறார்கள்.

வன்முறை
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமமுக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காவல்துறையினர் இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது ஏன்.? உள்நோக்கத்துடன் வன்முறையை தூண்ட முயற்சிக்கும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு தமிழக காவல்துறை துணை போவதன் மர்மம் என்ன?" என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications