பத்திரப்பதிவில் புதிய மாற்றத்திற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? அண்ணாமலை சந்தேகம்
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான பத்திரப்பதிவில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு, தங்களுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதவ தமிழக அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, பத்திரப்பதிவுக்கான நில மதிப்பீட்டில் 10% முத்திரைக் கட்டணம் 7% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக் கட்டணம் 4%இல் இருந்து 2%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கணினிக் கட்டணம் 10 பக்கங்களுக்கு 100 ரூபாயும், அதற்கு மேல் தலா ஒரு பக்கத்துக்கு 10 ரூபாயும் கூடுதலாக வசூல்செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 பக்கங்களுக்கு 200 ரூபாய், அதற்கு மேல் தலா ஒரு பக்கத்துக்கு 100 ரூபாய் எனக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

'குடும்ப செட்டில்மென்ட்' பத்திரங்களுக்கு ரூ.4,000 கட்டணம் என்பது தற்போது ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முத்திரைக் கட்டணம் ரூ.25,000 என்பது ரூ.40,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனையின்போது, தற்போது உள்ள நடைமுறையான 'யு.டி.எஸ்.' அளவில் விற்பனை விலையின் மீது போடப்படும் பத்திரப்பதிவு கட்டணம் என்ற செயல்முறையை நீக்கி, கூட்டு மதிப்பு விலை என்ற புதிய செயல்முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு மாற்றங்கள் பத்திரப்பதிவு துறையில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான பத்திரப்பதிவில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு தங்களுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதவ தமிழக அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலைவௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்கள் பதிவு-கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்தல் தொடர்பாக தமிழக அரசு, சமீபத்தில் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், பகுதிவாரியாக அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனையின்போது, தற்போது உள்ள நடைமுறையான 'யு.டி.எஸ்.' அளவில் விற்பனை விலையின் மீது போடப்படும் பத்திரப்பதிவு கட்டணம் என்ற செயல்முறையை நீக்கி, கூட்டு மதிப்பு விலை என்ற புதிய செயல்முறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னையின் பிரதான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வழிகாட்டி மதிப்பு 3 வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு அடிப்படை கூட்டு மதிப்பு ரூ.16,000, பிரிமீயம் கூட்டு மதிப்பு ரூ.18 ஆயிரம், அல்ட்ரா பிரிமீயம் கூட்டு மதிப்பு ரூ.22 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20 அடி சாலை, 50 அடி சாலை என சாலையின் அகலத்தின் அடிப்படையில் வழிகாட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒட்டு மொத்த பகுதிக்கும் ஒரே அளவு வழிகாட்டி மதிப்பு என்பது எப்படி நியாயமான நடைமுறையாகும்? சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரே பகுதியில் சாலை வசதி, குடியிருப்பு வசதி, சுற்றுசூழல், அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய நிறுவனம் வழங்கும் வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே ஒரு வீட்டின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, ஒரு சதுரடிக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்போது, அதற்கு வழிகாட்டு மதிப்பை 100 முதல் 150 சதவீதம் உயர்த்தியதன் விளைவு, பத்திரப்பதிவு கட்டணம் 100 முதல் 150 சதவீதம் உயர்ந்துள்ளது. தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்கள், இந்த புதிய நடைமுறையால் வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவார்கள்
உயர்த்தப்பட்ட வழிகாட்டு மதிப்பின் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்காமல், வீட்டுமனைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான பத்திரப்பதிவில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு, தங்களுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதவ தமிழக அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
பத்திரப் பதிவுத்துறை 3 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறை மக்களின் உழைப்பை சுரண்டும் வகையில் செயல்பட்டு வருவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இந்த புதிய கூட்டுமதிப்பு முறையை உடனடியாக கைவிட்டு, பழைய பத்திரப்பதிவு கட்டண முறையிலேயே வசூலிக்க வேண்டும்" இவ்வாற அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications