தரமான கல்வியை பாஜக அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்தை மத்திய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி (Samagra Shiksha Scheme) ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மொத்த செலவான ரூ.3,586 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.

தமிழகத்திற்கு மத்திய அரசு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்தது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனாலும் மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான முதல் தவணை தொகையான ரூ.573 கோடி என்பது ஒதுக்கீடு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அண்மையில் பெரிய அளவில் விவாதம் ஆனது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார். புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தாததன் காரணமாகவே நிதி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ திட்டத்திற்கு மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதி குறித்து முன்னணி நாளிதழ் ஒன்றில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே தராளமாக நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை குறிப்பிட்டு, மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாக மத்தி அரசு நிதி வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு ஒன்றிய அரசின் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. கல்வி மற்றும் சமத்துவத்தை மத்திய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications