மகளிர் உரிமைத் தொகை மாசம் ரூ 2500 தரேன்னீங்க! இப்ப ரூ 1000 தர முடியலையா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: மாதம் ரூ 2500 தருவதாக கூறிவிட்டு, ரூ 1000 கூட தராம இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா என முதல்வர் விஜய்யை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தேர்தலுக்கு முன்பே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தலா ரூ 1000 வீதம் ரூ 3000, கோடை கால சிறப்பு நிதி என்ற பெயரில் ரூ 2000 என ரூ 5000 பிப்ரவரி மாதத்திலேயே முந்தைய திமுக அரசு வழங்கியது.

இந்த நிதியை ரூ 2000 ஆக உயர்த்துவதாக திமுக அரசு அறிவித்திருந்தது. அது போல் அதிமுகவும் ரூ 2000 தருவதாக தெரிவித்திருந்தது. மேலும் தவெக விஜய் இந்த உரிமைத் தொகை ரூ 2500 ஆக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம், நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. அதன் மீது நடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், விஜய் அரசை சரமாரியாக விமர்சித்திருந்தார்.
அவர் பேசுகையில், திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15 ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 7ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை. முக்கியமாக அடுத்த மாதம் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், அப்போது காலை உணவுத் திட்டத்திற்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்கையில், முந்தைய திமுக அரசில் தொடங்கப்பட்ட நல்ல திட்டங்கள் நம் ஆட்சியிலும் தொடரும் என தெரிவித்திருந்தார்.
சொன்னது போல் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்ட பயனாளிகளுக்கு தலா ரூ1000 வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மாதந்தோறும் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை நாளை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதுகுறித்து விஜய் நிதித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விஜய் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்திற்கான ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதை மேற்கோள்காட்டி முன்னாள் முதல்வர் ஸ்டாலின், விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications