தலித் வாக்குகளை ‘குறி’ வைக்கிறாரா விஜய்? ‘லப்பர் பந்து’ பேசும் அரசியல் குறியீடு என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே விஜய் அரசியல் கணக்கு என்னவாக இருந்தது? அது எந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தொடங்கப்பட்டது என்பது பற்றி முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு கருத்துகளை இந்தக் கட்டுரை அலசி ஆராய்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சினிமாவில் தலித் திரைப்படங்கள்தான் இன்றைய டிரெண்ட். அதை அதற்கு தனியே விளக்க உரை எழுத வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ரஜினிகாந்த், 'கபாலி', 'காலா' என்று களம் மாறியது எதனால் என்பது பலருக்கும் புரிந்திருக்கும்.

பா.ரஞ்சித் படங்கள் அடுத்து மாரி செல்வராஜ் படங்கள் வெளியாகும் போது திரைப்படத்தில் நடித்துள்ள நாயகனைத் தவிர்த்து இயக்குநர்களின் கட் அவுட் காட்சிப்படுத்திய அரசியலைப் பலரும் அறிந்திருப்பார்கள். உண்மையாகச் சொன்னால், திரைத்துறை மற்றும் இலக்கியம், அரசியல் என்று பல தளங்களில் தலித் இயக்கங்கள் எழுச்சி பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. 'நீலம்’ பண்பாட்டு இயக்கம் என்பது சினிமாவைக் கடந்து தலித் எழுத்து, இசை எனப் பல வகைகளில் வீரியமாகச் செயல்படுகிறது. அதற்கான கூட்டங்கள் மிக அதிக அளவில் கூடுகின்றன.
ரஜினியை தொடர்ந்து 'அசுரன்’ போன்ற பாத்திரங்களில் நடிக்க தனுஷ் முன் வருகிறார். இதுவரை காமெடி, லவ், டூயட் என மேலோட்டமாக நடித்துக் கொண்டிருந்த உதயநிதி, திடீரென்று 'மாமன்னன்’ போன்ற ஆழமான கதையைத் தேர்வு செய்து நடிக்கிறார். இதற்குள் எல்லாம் எந்த அரசியல் காய் நகர்த்தலும் இல்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பழங்குடி மக்களின் உண்மைக் கதையை திரைக்கு மாற்றும் போது அதற்கு 'ஜெய்பீம்’ என்று தலைப்பு வைக்கப்படுகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை உசுப்பும் விதமாக காலெண்டர் பயன்படுத்தப்படுகிறது.
அந்தக் கதை நிஜத்தில் தலித் சமூகத்தை சேர்ந்ததில்லை. பாதிக்கப்பட்ட தரப்பில் நின்ற இயக்கம் கம்யூனிஸ்ட். அதிலிருந்தவர் ஒருவரின் சமூகம் அந்தப் பகுதியில் ஆதிக்க சமூகம். ஆனால், அதை எதிர்த்து அவர் பழங்குடி மக்கள் தரப்பில் நின்று சட்டரீதியாக வெற்றியும் பெறுகிறார். அதைத் தலித் சினிமா போல் மாற்றியதன் பின்னால் அரசியல் உள்ளது என பாமக வாதிட்டது. அதன் நாயகன் சூர்யா மீது கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை சூர்யா.
இப்போது லப்பர் பந்து என ஒரு திரைப்படம் வெளியாகிறது. அதில் தலித் பின்புலத்தைக் கொண்ட கதாபாத்திரம் (ஹரீஷ் கல்யாண்) விஜய் ரசிகராகவும் விஜய் பாடலை கிரிக்கெட் ஆடும்போது பின்புலமாக ஒலிக்க வைத்து ஒரு அரசியல் கட்டமைக்கப்படுகிறது. அவரது செல்போன் ரிங் டோனிலும் விஜய் பாடல் வருகிறது. இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, தலித் சினிமா பற்றிய தனது புரிதலை முன்வைத்துப் பேசிய பேட்டி வைரலாக பரவுகிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே விஜய் மக்கள் இயக்கம் அம்பேத்கரை 'குறி’ வைக்கத் தொடங்கியது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாட விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டது. அது குறித்து புஸ்ஸி ஆனந்த் மூலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவும் பறந்தது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் சில அம்பேத்கர் சிலை மற்றும் உருவ படத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்தார்.
அன்றே விஜய் மக்கள் இயக்கம் தலித் மக்களின் வாக்குவங்கியைக் குறிவைக்க ஆரம்பித்தது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள விசிக வாக்குகள் சிதறக்கூடும் என்றும் அது திமுகவை பாதிக்கும் என்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள் நினைத்தனர். ஆகவே விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது என வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாக அப்போது தகவல் பரவியது.
விஜய் நற்பணி இயக்கம் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் ஆப் மூலம் 40 லட்சத்திற்கு மேல் கட்சியில் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின்னால் கட்சியின் கொடி என வரும்போது அதில் யானை உருவம் இடம்பெற்றது. யானை என்பது இந்தியா முழுக்க உள்ள தலித் மக்களின் அரசியல் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தேசிய தலித் கட்சியாக உள்ள பகுஜன் சமாஜ் அதை உரிமைக் கொண்டாடி வருகிறது. அதை அறிந்து யானையை விஜய் கட்சிக் கொடிக்குள் கொண்டுவந்தார்.
தமிழ்நாட்டில் தலித் மக்களின் ஓட்டு கிட்டத்தட்ட 22% மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியை விசிக தன் பக்கம் வைத்துள்ளது. அது போக அதிமுக, திமுகவில் தலித் ஓட்டுகள் உள்ளன. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே தலித் வாக்குகள் அதிகம் உள்ளன. ஒரு கட்டத்தில் விஜயகாந்த் கட்சி விருத்தாசலம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய சில பகுதிகளில் நிறைய தலித் மக்களை உள்ளே இழுத்தது. அது வலுவாக மாற தலித் மக்கள் ஒரு காரணமாக இருந்தனர்.
இதை எல்லாம் உணர்ந்துதான் விஜய் தலித் வாக்குகள் மீது ஒரு கண்வைக்கிறார். அவர் கட்சியில் சேர்ந்துள்ள 40 லட்சம் உறுப்பினர்கள் யார்? சமூக ரீதியாக யார் அதிகம் உள்ளனர் என்ற தகவல்கள் வெளிப்படையாக இல்லை. ஆனால், நிர்வாகிகள் மட்டத்தில் நிச்சயம் ஒரு டேட்டா கிடைத்திருக்கும் அதைக் கொண்டே தலித் அரசியல் நகர்வை விஜய் கையில் எடுத்துள்ளார் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
கட்சி தொடங்கும் வரை பெரியாரைப் பற்றி பேசாதவர் திடீரென்று பெரியாரை மாலை போட்டு மரியாதை செலுத்துகிறார். சமூகநீதி, சம உரிமை என்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டுநீட் தேர்வு தோல்வியை தாங்க முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரது வீட்டிற்கே நேராகச் சென்று ஆறுதல் கூறியிருந்தார் விஜய். என்னதான் ஒரு மருத்துவ மாணவியின் கண்ணீரில் கலந்து கொண்டார் விஜய் எனச் சொல்லப்பட்டாலும் அதற்குள் ஒரு அரசியல் பார்வை இல்லை என்று சொல்ல முடியாது. திமுக அனிதாவை அரசியலுக்காகப் பயன்படுத்தியதற்குப் பின்னால் உள்ள அதே கணக்கு விஜய்யிடமும் இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அனிதா மறைவுக்குப் பின்னர் படிப்படியாக வெளிப்படையான அரசியலுக்கு தயாரானார் விஜய். அதன் தொடர்ச்சியாகவே நடந்து முடிந்த ஊரக ஊராட்சி மன்றத் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது. அதன் மூலம் 2 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 15 ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் என 129 பேர் வெற்றி பெற்றனர். அத்தனை பேரையும் நேரில் அழைத்து விஜய் பாராட்டினார். அடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் விஜய் ரசிகர் மன்றத்தினர் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றனர்.
இதில் கணிசமாகத் தலித் பிரதிநிதிகள் கலந்துள்ளனர். அதையும் கணக்கில் கொண்டுதான் கட்சித் தொடங்குவதற்கு முன்பே அம்பேத்கரைக் கையில் எடுத்த விஜய், கட்சிக்குக் கொடி என வரும்போது யானையைக் கையில் எடுத்தார். இதனால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங் வாக்குகளை தன் பக்கம் இழுக்க முடியும் என விஜய் நம்புகிறார். இந்தக் கருத்துக்கு நிகராக விஜய் விசிக ஓட்டுகளைப் பிரிக்கலாம் என்கிறார்கள். ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமாவளவன் அதிமுகவின் இளைய தலைமுறை வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார் என்றும் 10% வாக்குகள் அவருக்குக் கிடைக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு நேர்மாறாக அரசியலில் விவரம் அறிந்தவர்கள் மீனவர்கள் மற்றும் தலித் வாக்குகள் விஜய் பக்கம் போகும் என்கிறார்கள். ஆனால் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தவெக 4% வாக்குகள் மேல் தாண்டாது என்கிறார். அப்படி என்றால் சீமானைவிடக் குறைவான வாக்குகளைப் பெறுமா என்பதை எப்படி ஏற்க முடியும்? என்பது கேள்வியாகத் தொக்கி நிற்கிறது. தொடர்ந்து பேசிய உள்ள ரவீந்திரன் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது 3ஆவது இடத்தைப் பிடித்தார். விஜய் 5ஆவது இடத்தைத்தான் பிடிப்பார் என்கிறார்.
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாக திமுக கூட்டணியில் அமைதியாக இருந்துவந்த விசிகவும் அதன் நிறுவனர் திருமாவளவனும் எப்போதோ மூட்டைக் கட்டி வைத்த ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கோஷத்தை மீண்டும் கையில் எடுக்கிறார். தலித் முதல்வர் என்கிறார். உடனே பாமக தலித் முதல்வர் கோரிக்கையை ஏற்கிறது. திருமாவளவன் இப்போது முன்பைவிட அதிகம் திமுக கூட்டணி குறித்த முரண்பாடுகளை எடுத்துப் பேசுகிறார்.
ராஜாஜி மது ஒழிப்பைக் கொண்டு வந்தார் என்பதற்காக மாநாட்டில் அவருக்கு விசிக கட் அவுட் வைக்கிறது. அண்ணா மது ஒழிப்பு பற்றி எதையும் பிரச்சாரம் செய்யவில்லை. அவருக்கு கட் அவுட் வைத்துள்ளது விசிக. குலக் கல்வியை கொண்டுவந்தவரும் இதே ராஜாஜிதான் என்ற விமர்சனப் பார்வையும் முன்வைக்கப்படுகிறது. இதுவரை சத்தமே போடாமல் இருந்த காங்கிரஸ் கட்சி திடீரென்று உள்ளாட்சித் தேர்தலில் 30% இடம் ஒதுக்க வேண்டும் என்கிறது.
இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர் கைக்கே சென்றுள்ளது. ஆக, காங், விசிக, விஜய் கூட்டணி ஏன் உருவாகாது என்கிறார் தமிழருவி. திமுக கூட்டணியில் வலிமையே 23% சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கிதான். அதைக் கைப்பற்றுவதுதான் விஜய்யின் நோக்கம் என்கிறார் தமிழருவி மணியன்.
ஆனால், மாநாட்டுக்குக் கால்கோள் விழா நடத்தியதையே சாதனையாக அறிக்கை விட்டுள்ள விஜய், "நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்க பெரும் படை" என்கிறார். இதுவரை இவரது கட்சி மற்ற கட்சிபோல் இல்லை. தனித்துவமானது என்பதை நிரூபிக்கும்படி எதையுமே செய்யவில்லை. கழகம் என்பதை திமுக, திகவின் அடையாளம்தான். பிறகு எப்படி வித்தியாசப்பட்டுள்ளது என்பது புரியவில்லை.
அதை வைத்துத்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொள்கையை அறிவிக்காமல் புதுமை செய்தவர் விஜய் என்று கிண்டலடிக்கிறார். பெரியாரை ஆதரிப்பதால் நாதக உடன் விஜய் விலகி நிற்கிறார். நாதக வாக்கும் தவெகவுக்கு வரும் என்கிறார்கள். சீமான் பேச்சைக் கேட்டு கட்சிக்கு வந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பேசும் விஜய் பக்கம் எப்படி ஈர்க்கப்படுவார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications