இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு முக்கிய பொறுப்பு.. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்!
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உள்ளிட்ட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் பன்னீர்செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளை மேற்கொள்ள 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது உயர் கல்வி மன்றம்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம். இந்நிலையில், இந்த மன்றத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உள்ளிட்ட 4 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கல திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேல், சந்திரயான்-3-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலவின் தென் துருவத்தை உலகிற்கு காட்டிய பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாகத் தரையிறங்கியது இஸ்ரோ. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்தான் வீரமுத்துவேல்.












Click it and Unblock the Notifications