அரசு ஒப்பந்தங்களை டெண்டர் எடுக்கும் நிறுவனங்களில் வருமானவரித்துறை ரெய்டு! 30+ இடங்களில் சோதனை
சென்னை: தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 30+ இடங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தினர். சென்னை, கோவை, ஈரோடு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

சுமார் 100+ வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கிய இந்த ரெய்டு பல மணி நேரம் கடந்தும் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனை: சென்னை மட்டுமின்றி கோவை, ஈரோடு, விருதுநகர், நாமக்கல் என 30+ இடங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இந்த ரெய்டடு நடைபெற்றது. தலைநகர் சென்னை பொறுத்தவரை அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் சோதனைகள் நடந்தது..
ஈரோட்டைத் தலைமையிடமாக வைத்துச் செயல்படும் சி.எம்.கே ப்ராஜெக்ட் பிரவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர், சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் இருக்கும் நிலையில் அங்கே துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கட்டுமான நிறுவனங்கள்: இந்த நிறுவனம் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பல அரசு கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. இது தவிர பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானம் உட்பட பல கட்டுமானங்களை இந்த நிறுவனம் தான் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் எழும்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சோதனை நடந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான குழந்தைசாமி பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.
கோவை நிறுவனங்கள்: கோவை எல்லன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷ் வீடு, அலுவலகம் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள கிரீன் பீல்ட் ரியல் எஸ்டேட் அலுவலகத்திலும் பத்துக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நாமக்கல் முல்லை நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி அன் கோ உரிமையாளர் சத்தியமூர்த்தி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது இது தவிர சிஎம்கே, ரீன் பீல்ட் மற்றும் ட்ரிநிவியா ஆகிய கட்டுமான நிறுவனங்களிலும் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்தோ அல்லது இதுவரை இந்த சோதனையில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்தோ அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications