உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தப்பு.. திடீரென பாய்ந்த அண்ணாலை.. அப்புறம் சொன்னதுதான் ஹைலைட்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு.. அப்படி விலை வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள். சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள் .. ஒருவரை கொல்ல நமக்கு உரிமை இல்லை.. உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு தமிழக பாஜகவின் வளர்ச்சி மிகவும் அதிகம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி ஐடியாலாஜிக்கலாக மிக அதிகம். ஏனெனில் குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது. இதை மக்கள் பார்க்கிறார்கள்.

இரண்டாவது தகுதி இல்லாத, திறமை இல்லாத மனிதர்கள் எப்படி குடும்ப அரசியல் மூலமாக அமைச்சர்கள் ஆகுறாங்க.. இது எல்லா மனிதர்களுக்குமே எதிரானது என்று சொல்லும் பொழுது, இளைஞர்கள் அதை ரசிக்கிறார்கள், கேட்கிறார்கள்.. அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மூன்றாவது சனாதன தர்மத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ எந்த வேலையும் செய்யாமல், வெறும் மைக்கில் மட்டும் எதிர்க்கிறேன் என்று சொல்லும் பொழுது அதை மக்கள் பார்த்து வருகிறார்கள். அதனால் உதயநிதி பேசிக்கொண்டே தான் இருக்க வேண்டும். அந்த பேச்சினை அவர் நிறுத்தவே கூடாது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அதன் விளைவினை நீங்கள் பார்ப்பீர்கள்"இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தவறாகவே பேசியிருந்தாலும், ஒரு அமைச்சரின் தலைக்கு விலை வைப்பது என்பது சரியா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாலை, அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு. அதை அன்றைக்கே கண்டித்தேன்..
அந்த மாதிரி யாராவது விலை வைக்கிறார்கள் என்றால், முதலில் அவர்கள் சனாதன தர்மத்தை பின்பற்றவில்லை என்று தான் அர்த்தம். அதாவது நான் ஒருத்தருக்கு விலை வைப்பேன் என்றால், இன்னொருவரின் உயிரை எடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது... நாம் என்ன கடவுளா..யாருக்கும் உரிமை கிடையாது..
அப்படி யாராவது.. இல்லை இல்லை.. நான் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறேன். நான் ஒருவருடைய தலைக்கு விலை வைக்கிறேன் என்றால், அவர் போலி சாமியாராகத்தான் இருக்க வேண்டும். அதை எல்லாம் தாண்டி, அவர் சனாதனம் தர்மம் தெரியாமல் அவர் பேச வேண்டும். அதனால் இதனை நான் வண்மையாக கண்டிக்கிறேன். இது ஏற்புடையது அல்ல.. " என்றார்.
அப்போது ஒரு செய்தியாளர், சினிமாவின் மூலம் அரசியல் பேச வேண்டும் என்று வெற்றிமாறன் பேசியிருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு அண்ணாமலை, " தவறு கிடையாதுன்னே.. சினிமா பவர்புல் மீடியம்.. எத்தனையோ கருத்தாக்கம் சினிமாவில் இருந்து காலம் காலமாக வருகிறது..
குறிப்பாக தமிழ் சினிமா அரசியலை டாமினேட் பண்ணியிருக்கு.. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சினிமா தான் அரசியலை தமிழகத்தில் தீர்மானிக்கிறது. ஆனால் சினிமாவில் என்ன கருத்துக்கள் உள்ள படம் எடுக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். நிறைய ஜாதி வன்மம் உள்ள படங்கள் வருகிறது. பள்ளிக் குழந்தைகள் சாதியை சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது என் குற்றச்சாட்டு" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications